பண்ருட்டி, ஜன. 28: பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகம் புதர் மண்டி (படம்) கொசு மற்றும் விஷப் பூச்சிகளின் சரணாலயமாக உள்ளதால் நோயாளிகள் பாதிப்படைகின்றனர்.
பண்ருட்டி கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் 1500-ம் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். 30-ம் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் பாம்பு, விஷப் பூச்சிகளின் சரணாலயமாக உள்ளது. மேலும் சில இடத்தில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் உள் நோயாளிகள் கொசுக் கடிக்கும், விஷப் பூச்சிகளுக்கு பயந்தபடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தலைமை மருத்துவர் மலர்கொடி தினமணி நிருபரிடம் கூறியது: மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கின்றது. எங்களிடம் உள்ள பணியாளர்களை வைத்து முடிந்த அளவு சுத்தம் செய்து வருகின்றோம். இருப்பினும் முழுமையாக செய்ய முடியவில்லை. மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து தரும்படி நகர நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுநாள் வரை செய்யவில்லை. புதர் மண்டியுள்ளதால் கொசு தொல்லை அதிகம் உள்ளது. இதனால் நோயாளிகளும், மருத்துவமனைப் பணியாளர்களும் அவதி அடைந்து வருகின்றோம் என்று வேதனையுடன் கூறினார்.
கடந்த 31.8.2009 அன்று இரவு ரோந்து சென்ற பண்ருட்டி எம்எல்ஏ. தி.வேல்முருகன், அரசு மருத்துவமனையை பார்வையிட்ட போது மின் விளக்குகள் எரியாததால் போதிய வெளிச்சமின்றியும், மின் விசிறிகள் இயங்காததால் கொசு கடியிலும், நோயாளிகள் அறைகளில் கம்பளிப் பூச்சிகள் மேய்வதைக் கண்டு வேதனை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சுகாதாரமான சூழலில் நோயாளிகள் சிகிச்சை பெற சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.