ராசிபுரம்,ஜூலை 9: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைந்து வருகிறது. இதனால், பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் வட்டாரங்களில் 128 ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு செய்துள்ள நிலையிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல்பட்டு வரும் இவை தற்போது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னக்கல் வாய்க்கால்பட்டறையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் தற்போது மூடப்பட்டுள்ளது (படம்).
1963-ம் ஆண்டு துவக்கப்பட்ட இப் பள்ளியில் சுமார் 75 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது. தற்போது மாணவர்கள் யாரும் வராததால் பள்ளி மூடப்பட்டுவிட்டது.
இதேபோல், தேங்கல்பாளையம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள சின்னக்காபாளையம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில், அதாவது நான்கு மாணவர்களே தற்போது உள்ளதால், இந்தப் பள்ளியின் நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கிராமப்புறங்களில் செயல்படும் இப் பள்ளிகளில் தொழிலாளர்களின் குழந்தைகளே அதிகம் பயின்று வருகின்றனர். தொழிலுக்காக பெற்றோர் வேறு ஊர்களுக்குச் செல்லும்போது தங்களது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால், மாணவர்களின் வருகை குறைவதாகக் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகள் பக்கம் பெற்றோர் கவனம் திரும்ப கற்பித்தல் தரம், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.