திருச்சி- திண்டுக்கல் அகலப்பாதை மின்மயமாக்கும் பணி ஜூலை 31-க்குள் நிறைவேற்ற திட்டம்
சென்னை, மே 8: திருச்சி- திண்டுக்கல் இடையிலான அகலப்பாதை மின்மயமாக்கும் பணிகளை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்
சென்னை, மே 8: திருச்சி- திண்டுக்கல் இடையிலான அகலப்பாதை மின்மயமாக்கும் பணிகளை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவைக் குறைக்கும் வகையில், அகலப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே துறை முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த நிதி ஆண்டுக்கான (2010-11) ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தில் அகலப்பாதை மின்மயமாக்கும் திட்டங்களுக்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரயில் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சென்னை- கன்னியாகுமரி இடையிலான அகலப் பாதை மின்மயமாக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்போது சென்னை-விழுப்புரம்- திருச்சி மார்க்கத்தில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு முக்கிய விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக திருச்சி- மதுரை இடையே மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதில் திருச்சி- திண்டுக்கல் இடையே மின்மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் ஜூலை 31-ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படும்.
திருச்சி- மதுரை இடையே மின் ரயில்களை இயக்கும் வகையில் மின் விநியோகத்துக்காக வையம்பட்டி, திண்டுக்கல், கூடல்நகர் ஆகிய 3 இடங்களில் தலா 10 மெகாவாட் திறனுள்ள துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 2-ம் கட்டமாக திண்டுக்கல்- மதுரை இடையிலான அகலப்பாதை மின்மயமாக்கும் பணிகளும் இப்போது தீவிரமாக நடைபெறுகின்றன.
மதுரை ரயில் நிலைய வளாகத்தில் விரிவாக்கப் பணி: திண்டுக்கல்- மதுரை 2-வது அகலப்பாதை திட்டத்தின் கீழ் மதுரை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் (யார்டு மற்றும் பிளாட்பாரங்களின்) விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்த ரயில் நிலையத்துக்கு வரும் ரயிலையும், புறப்படும் ரயிலையும் ஒரே நேரத்தில் கையாளும் வகையில் 2 தனித்தனியான ரயில் பாதை இணைப்புடன் அனைத்து பிளாட்பாரங்களும் மேம்படுத்தப்படும்.
இதில் முதல்கட்டப் பணிகள் வரும் செப்டம்பருக்குள் நிறைவேற்றப்படும்.
இதன்பின்னர் திண்டுக்கல்- மதுரை அகலப் பாதைம மின்மயமாக்கல் முழுமையாக வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும்.
மதுரை- தூத்துக்குடி- நாகர்கோவில் அகலப்பாதை மின்மயமாக்கல்: இதைத்தொடர்ந்து 3-வது கட்டமாக மதுரை- தூத்துக்குடி- நாகர்கோவில் இடையே 262 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலப் பாதை மின்மாயக்கல் திட்டப் பணிகளை ரூ. 176 கோடியில் நிறைவேற்ற இப்போது ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்து தெற்கு ரயில்வே வேலை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழித்தடத்தில் தலா ரூ. 8 கோடி செலவில் விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, நாங்குநேரி ஆகிய இடங்களில் 10 மெகாவாட் திறனுள்ள துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதே போல நாகர்கோவில்-திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இடையே 87 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 57 கோடியில் அகலப் பாதை மின்மயமாக்கும் பணிகளுக்கும் வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் இரணியலில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். இந்தப் பணிகள் நிறைவடைந்தத பின் வரும் 20012-ம் ஆண்டுக்குள் மதுரை- தூத்துக்குடி- நாகர்கோவில்-கன்னியாகுமரி- திருவனந்தபுரம் அகலப் பாதை முழுவதும் மின்மயமாக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து விரைவு ரயில்களின் பயண நேரமும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை குறையும் எனத் தெரியவந்துள்ளது.
விழுப்புரம்- வேலூர் அகலப் பாதை மின்மயமாக்கல்: இந்த வழித்தடத்தில் 150 கி.மீ. தூரத்துக்கு ரூ. 57 கோடியில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்காக திருவண்ணாமலை அருகே மற்றும் ஆரணி ஆகிய இடங்களில் 2 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள பணிகள் நிறைவடைந்த பின் தமிழகத்தில் 80 சதவீத ரயில் போக்குவரத்து மின்மயமாக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.