முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் பதிலுக்காகக் காத்திருக்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்!

வேலூர் : வேலூரை அடுத்த சேர்க்காட்டில், ரூ.20.35 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கு ரூ.28 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கருத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:18 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:50 PM

வேலூர் : வேலூரை அடுத்த சேர்க்காட்டில், ரூ.20.35 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கு ரூ.28 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கருத்துரு அனுப்பப்பட்டது.

 இங்கு, புதிய வளாகத் திறப்பு விழாவில் சனிக்கிழமை பங்கேற்கும் முதல்வர் கருணாநிதி, 2-வது கட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று பல்கலைக்கழகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

 வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002 அக்டோபர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் தற்போது வரை இப் பல்கலைக்கழகம் வேலூர் கோட்டைக்குள் இயங்கி வந்தது. இப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசுக் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 9, சுயநிதி கல்லூரிகள் 63 கீழ்த்திசை பண்பாட்டுக் கல்லூரிகள் 3 என மொத்தம் 85 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயின்று வருகின்றனர்.

Advertisement

  கோட்டை வளாகத்துக்குள் மிகக் குறுகிய இடத்தில், குறைந்த அளவு துறைகளுடன் இயங்கிய இப் பல்கலைக்கழகத்துக்கு, சேர்க்காடு, விண்ணம்பள்ளி கிராமங்களில் 112.68 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் புதிய வளாகம் கட்ட முதல்வர் கருணாநிதி கடந்த பிப்ரவரி 2008-ல் அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.20.35 கோடி நிதியை தமிழக அரசு அளித்தது.

 இதன் மூலம், திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம் ரூ.7.56 கோடி, கல்வித்துறை கட்டடம் ரூ.8.10 கோடி, நூலகக் கட்டடம் ரூ.2.44 கோடி, கணினி மையம் ரூ.1.25 கோடி, இதர அடிப்படை வசதிகள் ரூ.1 கோடியில் செய்து தரப்பட்டிருக்கின்றன.

 மேலும், பல்கலைக்கழக வளாகத்திலேயே திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தின் முன்புறம் பச்சைப் பசுமையாக நடைபாதையுடன் கூடிய புல்தரை அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டட கட்டுமானப் பணியைக் கடந்த இரு ஆண்டுகளாக பொதுப்பணித்துறை செய்து வந்திருக்கிறது.

 முதல்கட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இப் புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார்.

 தற்போது இந்த பல்கலைக்கழகம் 2-வது கட்டப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான திட்ட கருத்துரு தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் ரூ.28 கோடியில் மாணவ, மாணவியர் விடுதிகள், கலையரங்கம், விளையாட்டுத் திடல், ஊழியர் குடியிருப்புகள், வங்கிக் கிளைகள், கூடுதல் கல்விக் கட்டடம் ஆகியவை அமைய இருக்கின்றன.

 இவற்றைக் கட்ட பல்கலைக்கழகத்திடம் போதிய நிதி இல்லாததால், தமிழக அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

 இதுகுறித்து துணை வேந்தர் ஆ.ஜோதிமுருகன் கூறியது:

 புதிய மையத்துக்கு இடம் பெயர்வதன் மூலம், பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே உள்ள விலங்கியல், பொருளாதாரம், வேதியியல் மற்றும் உடற்கல்வியியல், அம்பேத்கர் படிப்பு ஆகியவற்றோடு, நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மேலும் 10 புதிய பிரிவுகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தனியாக நூலகக் கட்டடம் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பிரிவுக்கும் எனத் தனித் தனியே வகுப்பறைகளில் சிறிய வகை நூலகங்கள் இடம் பெற்றிருக்கும்.

 2-வது கட்டப் பணிகள் தொடங்க அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

 இதனால், திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய வளாகத் திறப்பு விழாவின்போது இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு வேலூர் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.