முகப்பு
தமிழ்நாடு

வெற்றிகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு முறை

சிதம்பரம்: தமிழக மக்களிடையே உணவுப் பழக்க வழக்கங்கள் மாறியதைத் தொடர்ந்து சந்தையில் அதிகளவு கோழிகள் தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கறிக்கோழிகள், முட்டைகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் உயர

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:56 PM
பகிர்:

சிதம்பரம்: தமிழக மக்களிடையே உணவுப் பழக்க வழக்கங்கள் மாறியதைத் தொடர்ந்து சந்தையில் அதிகளவு கோழிகள் தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கறிக்கோழிகள், முட்டைகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் உயர் ரக கோழிகளே அதிகளவு வளர்க்கப்பட்டு சந்தையின் தேவை நிறைவு செய்யப்பட்டு வருகிறது. இந்த உயர் ரக கோழிகளின் உற்பத்திச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து கோழி வளர்ப்பின் லாபம் வெகுவாக குறைந்து வந்தது.

இத்தகைய நடைமுறைச் சூழலில் குறைந்த செலவு, பராமரிப்பில் வேளாண்மை கழிவுப் பொருள்களைக் கொண்டு வளர்க்கப்படும் பாரம்பரிய கோழி வளர்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பண்ணை மகளிரைக் கொண்ட சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆந்திர மாநிலத்தில் பண்ணை மகளிர் மூலம் செயல்படுத்தப்பட்ட புதிய வாட்டா பகிர்வு முறை ஒரு பாரம்பரிய நாட்டுக் கோழி இனத்தை பாதுகாத்ததுடன் அதிகளவு வருமானம் பெற பெரிதும் உதவி புரிந்துள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: ஆந்திர மாநிலத்தில் நாட்டுக் கோழிகள் வளர்ப்பு வெகுவாக குறைந்து அதிகளவு உயர் ரக கோழிகளே வளர்க்கப்பட்டு வந்தன. அத்தகைய கோழிகளை விட உற்பத்தி மற்றும் பாதுகாப்புச் செலவுகள் குறைந்த, பாரம்பரிய அசல் வகை நாட்டுக் கோழிகளை வாட்டா பகிர்வு முறையில் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நூமாமிடி என்ற கிராமத்தில் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு ஜோடி அசல் கோழிகள் வழங்கப்பட்டன. மேலும் குழு உறுப்பினர்களுக்கு 2 அசல் சேவல்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு வளர்க்கப்பட்ட சமுதாய முயற்சியின் பயனாக 25 ஐந்து மாத குஞ்சுகள் உருவாக்கப்பட்டு இப்பெண்கள் குழு கிராமத்தில் கோழிகள் இல்லாத பெண்களுக்கு வழங்கியது. பின்னர் ஒரு வருட காலத்தில் 55 எண்ணிக்கையில் கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு சமுதாய சூழல் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கோழிகள் 2890க்கும் விற்கப்பட்டது. இவ்வாறு குறைந்த செலவில் அதிக வருமானம் பெற்ற மகளிர் குழுவினர் 8 கோழிகளை அருகே உள்ள கிராமங்களில் உள்ள 8 பெண்களுக்கு வழங்கினர். தற்போது 8 ஆண்டுகள் கடந்து சுமார் 6 கிராமங்களில் சுமார் 74 பெண்கள் வாட்டா பகிர்வு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து அதிக லாபம் பெற்றுள்ளனர்.

 இவ்வாறு அசல் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆந்திர மாநில கிராமங்களில் சமுதாய அளவில் பெருகி ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே தமிழக விவசாயிகள், பண்ணை மகளிர் ஆகியோர் இணைந்து நமது பாரம்பரிய நாட்டுக்கோழி ரகங்களை ஆந்திர மாநில வாட்டா பகிர்வு முறையை பின்பற்றி வளர்த்து அதிகளவு பொருளாதார பலன்களை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.