முகப்பு
தமிழ்நாடு

தாலுக்கா அலுவலகத்துக்காக போராடும் 38 ஊராட்சியினர்

திருத்தணி, அக். 21: ஆர்.கே.பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக 38 ஊராட்சிகளின் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் போராடி வருகின்றனர். இந்த ஆண்டாவது வட்டாட்சியர் அலுவலகம

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:56 PM
பகிர்:

திருத்தணி, அக். 21: ஆர்.கே.பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக 38 ஊராட்சிகளின் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் போராடி வருகின்றனர்.

இந்த ஆண்டாவது வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஆர்.கே.பேட்டையிலிருந்து பள்ளிப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல 40 கி.மீ. தொலைவு உள்ளது.

பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் 71 ஊராட்சிகளும், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சிகளில் 33 வார்டுகளும் உள்ளன.

பள்ளிப்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், பேரூராட்சிகளில் இருப்பவர்களும் பட்டா மாற்றம், பிறப்பு, இறப்பு வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் வந்து சான்றிதழ்களை பெற்று செல்கின்றனர்.ஆனால் ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள வெடியங்காடு, பைவலசா, எரும்பி, ராமாபுரம், சின்ன நாகபூடி, பெரிய நாகபூடி, சகஸ்ரபத்மாபுரம், நிலோத்பாலாபுரம், தானூர் மல்லாபுரம், நீசரகாண்டாபுரம், அய்யனேரி, வீராணத்தூர் உள்ளிட்ட 38 ஊராட்சிகளில் வாழும் பொதுமக்கள் ஜாதி, வருமானம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, பட்டா மாற்றம் ஆகியவற்றுக்காக 40 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றுதான் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று வர பஸ்கள் சரிவர இல்லாததாலும், அந்த அலுவலகத்துக்கு பல்வேறு சான்றிதழ்கள் பெற சென்றால் ஒரு நாள் முழுவதும் அங்கேயே போய்விடுகிறது. மீண்டும் வீட்டுக்கு வர இரவு ஆகிவிடுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆர்.கே.பேட்டை விவசாயி பழனி கூறியது: "ஆர்.கே.பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பள்ளிப்பட்டு சட்டமன்ற உறுப்பினரிடமும், மத்திய அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை ஆர்.கே.பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.

ஆர்.கே.பேட்டை பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க கடந்த 20 ஆண்டுகளாக 38 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித பயனும் இல்லை என்றார் அவர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி, ஆர்.கே.பேட்டை பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க தற்போதைய ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.