சூப்பர்ஃபாஸ்ட்டாக மாறிய சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள்: கட்டண உயர்வால் பயணிகள் அவதி
அரக்கோணம்: சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் பல அரசுப் பேருந்துகளை எக்ஸ்பி
அரக்கோணம்: சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தமிழகத்தில் பல அரசுப் பேருந்துகளை எக்ஸ்பிரஸ் என அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது இந்த முறையை ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் தற்போது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸôக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணச்சீட்டுடன் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து சோளிங்கபுரம் ரயில்நிலையம் இருக்கும் பாணாவரத்துக்கு செல்ல சாதாரண எக்ஸ்பிரஸ்களில் ரூ.16 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது ரூ.26 வசூலிக்கப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு ரூ.71ஆக இருந்த கட்டணம் இப்போகு ரூ.81ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்திலோ, நிறுத்தங்களிலோ எந்த மாற்றமும் இல்லை. ரயிலின் எண் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. சாதாரண பாசஞ்சர் ரயிலில் ரூ.5 கட்டணம் வசூலிக்கும் நிலையில், எக்ஸ்பிரஸில் 3 மடங்கு கட்டணமாக ரூ.16-ம், சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸில் 5 மடங்கு கட்டணமாக ரூ.26-ம் வசூலிக்கப்படுவதுதான் பயணிகளை வேதனையடையச் செய்துள்ளது.
நீண்ட தூர ரயில்களை சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களாக மாற்றுவதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.
ஆனால் சாதாரண மக்கள் அன்றாடம் பயணிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர்ஃபாஸ்டாக மாற்றியுள்ளதற்குத்தான் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரக்கோணம் ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியது: கூடுதலாக சேவை அளித்தால் கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம்.
கூடுதல் சேவை எதுவுமே இல்லாமல் கட்டணத்தை ஏற்றுவது கண்டிக்கத்தக்கது.
தெற்கு ரயில்வேயில் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸôக மாற்றப்பட்ட பகல்நேர ரயில்களை மீண்டும் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றார்.