தமிழ்நாடு

புதுத் தொகுதியான கே.வி.குப்பத்தில் எந்தக் கட்சிக்கு வாய்ப்பு?

குடியாத்தம், பிப். 16: தொகுதி மறுசீராய்வின்கீழ், தேர்தல் ஆணையம் புதிதாக உருவாக்கியுள்ள கே.வி. குப்பம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில், எந்தக் கட்சி போட்டியிடும் என்பதை வாக்காளர்களால் யூகிக்க முடிகிறது

கே. நடராஜன்

குடியாத்தம், பிப். 16: தொகுதி மறுசீராய்வின்கீழ், தேர்தல் ஆணையம் புதிதாக உருவாக்கியுள்ள கே.வி. குப்பம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில், எந்தக் கட்சி போட்டியிடும் என்பதை வாக்காளர்களால் யூகிக்க முடிகிறது.

 குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளையும், கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளையும், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளையும் இணைத்து 73 ஊராட்சிகள் கொண்ட கே.வி.குப்பம் சட்டப் பேரவைத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கிராமங்களையே உள்ளடக்கிய தொகுதி: சுமார் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில், 213 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நகரமோ அல்லது பேரூராட்சியோ இல்லாமல், முழுக்க முழுக்க கிராமங்களைக் கொண்டது என்பதே இத்தொகுதியின் தனிச் சிறப்பு.

 அதிமுக அணியில்: சட்டப் பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் நேர கூட்டணிகள் உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தமும் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

 கே.வி. குப்பம் தொகுதியை உள்ளடக்கிய செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவரும் அக்கட்சியின் மாநிலத் தலைவருமான செ.கு. தமிழரசன் இத்தொகுதியில் போட்டியிடுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

 வெற்றிக்குச் சாதகமாக உள்ள இத்தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திவருகின்றனர்.

 இதேநேரத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுக தலைமைக் குழுவினரிடம் அளித்த தொகுதிகள் கேட்புப்பட்டியலில் கே.வி. குப்பம் (தனி) இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 திமுக அணியில்: அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் இத்தொகுதிக்குள்பட்ட காங்குப்பம் என்பதால், திமுகவும் இங்கு போட்டியிட விரும்புகிறது.

 கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இலவச கலர் டி.வி., கேஸ் அடுப்பு உள்ளிட்ட இலவசத் திட்டங்களால் கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால் இத்தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு வழங்கக் கூடாது என்றும் திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அமைச்சரும் உறுதியளித்திருப்பதாக அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 காங்கிரஸ் கட்சியோ மாவட்டத்தில் வேலூர், சோளிங்கர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளை எதிர்நோக்கியுள்ளது. அருகருகேயுள்ள இரு தனித் தொகுதிகளான குடியாத்தம் அல்லது கே.வி.குப்பம் தொகுதிகளில் ஒன்றைக் கோரவும் காங்கிரஸின் ஐவர் குழுவிடம் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இத்தொகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறது.

 பிரசாரமும் தொடங்கியது: இரு திராவிட கட்சிகளும் இங்கு போட்டியிட ஆர்வம் செலுத்திவரும் நிலையில், கூட்டணிக் கட்சியினரும் இத்தொகுதியைப் பெற்றுவிடத் தீவிரமாக உள்ளனர். அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சியே இங்கு போட்டியிடும் என்றும் அடுத்த சில நாள்களில் செ.கு. தமிழரசன் பிரசாரத்தைத் தொடங்கி விடுவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஆனால், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சியினருமே இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து அதிமுகவினரும், இலவசத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து திமுகவினரும் பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால், புதுத் தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT