மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் மாநில நெடுஞ்சாலை!?
திருத்தணி, ஜன.18: திருத்தணி - சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் விழுந்து காயம் அடைந்து அரசு மருத்துவனைக்கு செல்கின்றனர். திருத்தணி வழியாக ஆ
திருத்தணி, ஜன.18: திருத்தணி - சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் விழுந்து காயம் அடைந்து அரசு மருத்துவனைக்கு செல்கின்றனர்.
திருத்தணி வழியாக ஆர்.கே.பேட்டை - சித்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை திருத்தணியை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றன. மேலும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகளும் சைக்கிள், பஸ் மூலம் திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருத்தணி முருகூர் பகுதியில் ஆங்காங்கே மோட்சத்துக்கு அழைத்து செல்லும் மரணப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் என்றால் இப்பள்ளங்களை வாகன ஓட்டிகள் தவிர்க்க முடியவில்லை. இதனால் இப்பள்ளத்தில் வாகனஙகள் சரிந்து விபத்துக்குள்ளாகின்றன. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
திருத்தணி - சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிர்தபுரம், அகூர், நத்தம், கோரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக பல இடங்களில் சாலைகள் தார் பெயர்ந்து ஜல்லி கற்களாக காணப்படுகிறது.
சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து படுகாயத்துடன் செல்கின்றனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இச்சாலையில் தான் சமீபத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரங்கன் இருசக்கர மோட்டார் வாகனத்தில் திருத்தணி - நத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் செல்லும்போது பள்ளத்தில் தவறி விழுந்து தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்தார். இச்சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் மெத்தனம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இனியாவது வாகன ஓட்டிகளை மோட்சத்துக்கு அழைத்து செல்லும் மரண பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.