தமிழ்நாடு

அரசின் பாராமுகத்தால் மூடப்படும் அபாயத்தில் ஸ்மைல் பள்ளிகள்

சேலம்: மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகள் (ஸ்மைல்) மூடப்படும் அபாயத்தில் உள்ளன.  சேலம் மாவட்டத்தில் வெள்ளிப்பட்டறை, பஞ்சாலை, பூப

க. தங்கராஜா

சேலம்: மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகள் (ஸ்மைல்) மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

 சேலம் மாவட்டத்தில் வெள்ளிப்பட்டறை, பஞ்சாலை, பூப்பறித்தல், விதை உற்பத்தி போன்ற தொழில்களில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்காக 39 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. சராசரியாக ஒரு பள்ளிக்கு 50 பேர் என 1,900 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள், ஒரு தொழில் பாட ஆசிரியர், உதவியாளர்கள் என 5 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஆசிரியர்களுக்கு தலா ரூ.1,500 வீதமும், ஆயாவுக்கு ரூ.800-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மைல் திட்ட பள்ளிகளை அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

 சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் பெரும்பாலான பள்ளிகளுக்கு பல மாதங்களாக வாடகை நிலுவை உள்ளது.

 தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்படி தினசரி சத்துணவு வழங்க ரூ.5 செலவிடப்பட வேண்டும். மாத உதவித் தொகையாக ரூ.100 வழங்க வேண்டும்.

 ஆனால், பல காலமாக தாங்கள் கடன் வாங்கி சத்துணவு அளித்ததாகக் கூறும் ஊழியர்கள், தங்களது தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாகவே, கடந்த ஜனவரி மாதம் முதல் மாநில அரசு அரிசி, பருப்பு, எண்ணெய், கடலை, பச்சைப் பயிறு போன்றவற்றை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

 இருப்பினும் உருளைக் கிழங்கு, சமையலுக்குத் தேவையான புளி, மிளகாய், சமைப்பதற்கான விறகு ஆகியவற்றை இப்போது ஆசிரியர்களே வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆறு மாதங்களாக ஊதியமே வழங்கப்படாததால், கடன் வாங்கியே மாணவர்களுக்கு சமையல் பொருள்களை வாங்க வேண்டிய நிலை உள்ளதாகக் கூறுகிறார் ஸ்மைல் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி பிரபா ராணி.

 மீண்டும் வேலைக்கு... மேலும் பல இடங்களிலும் வாடகை கொடுக்க முடியாததாலும், கூடுதல் வாடகை கேட்டும் பள்ளி கட்டட உரிமையாளர்கள் ஸ்மைல் பள்ளிகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

 மேலும், மாணவர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டதால், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதற்கே ஏழைப் பெற்றோர் விரும்புகின்றனராம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 இது குறித்து ஸ்மைல் திட்ட மாவட்ட இயக்குநர் பி.வி. விஸ்வநாதனிடம் கேட்டபோது, அவர் கூறியது: மத்திய அரசிடம் இருந்து ஸ்மைல் பள்ளிகளுக்கான நிதி உதவி இதுவரை வரவில்லை. வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிதியுதவி வழங்கப்படுகிறது.

 ஜூலை, அக்டோபர் மாதங்களில் இந்த உதவித்தொகை கிடைக்கும். குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.100 உதவித் தொகை இப்போது வழங்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக இப்பள்ளிகளில் இருந்து வழக்கமான பள்ளிக்கு மாறும்போது அவர்களுக்கு ஒட்டு மொத்தமாக இந்தத் தொகை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் ஸ்மைல் பள்ளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கட்டட வாடகை பாக்கி உள்ளது. ஜூலை மாதம் நிதி வந்ததும் கடன் அடைக்கப்பட்டுவிடும் என்றார்.

 சிறு வயதிலேயே குடும்ப சூழலால் வேலையில் தள்ளப்பட்டு மீட்கப்பட்ட இக்குழந்தைகளுக்கு, கல்வி வழங்கும் பணியை முறையாகச் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT