காவலர்களின் வாகன நிறுத்தமாக மாறிய பாரதி பூங்கா
புதுச்சேரி, ஏப். 15: புதுச்சேரியில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பாரதி பூங்கா, போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துமிடமாக மாறிவிட்டது. புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் சுற்று
புதுச்சேரி, ஏப். 15: புதுச்சேரியில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பாரதி பூங்கா, போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துமிடமாக மாறிவிட்டது.
புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர், பாரதி பூங்காவைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதேபோல, உள்ளூர் பொதுமக்களில் பலர் இப் பூங்காவில் மாலைப் பொழுதைக் கழிக்கின்றனர்.
மேலும், அதிகாலையில் நடைபயிலும் பொதுமக்களும், இங்குள்ள நடைபாதையைப் பயன்படுத்துகின்றனர்.
Advertisement
இப் பூங்காவுக்குள் எந்த தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது. பூங்காவைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரையொட்டியே, வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.
பூங்காவுக்கு வெளியே துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்குப் பாதுகாப்புப் பணிக்கு வரும் காவலர்களும், காவல்துறை அதிகாரிகளும், தங்களது வாகனங்களை இந்த பூங்காவுக்குள் நிறுத்துகின்றனர். இது அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகள் விளையாடும் பூங்காவுக்குள், இவ்வாறு 4 சக்கர வாகனங்களை உள்ளே வர அனுமதிப்பது கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், உள்ளே நிற்கும் போலீஸôரின் ஜீப்புகள் வெளியேறிய பிறகு, தங்களது வாகனங்களையும் உள்ளே நிறுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி மோசமான முன்னுதாரணத்தை போலீஸாரே ஏற்படுத்துகின்றனர். ஒரே ஒரு போலீஸ் வாகனம் உள்ளே நின்றால், அது பூங்காவைப் பாதுகாக்கவும், அங்கு வருவோரைக் கண்காணிக்கவும் நிற்கிறது என்று சொல்லலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக 4 அல்லது 5 வாகனங்கள் நிற்பதால், பொதுமக்களின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
போலீஸாரின் வாகனங்களை ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயோ அல்லது சட்டப்பேரவை வளாகத்துக்கு உள்ளேயோ நிறுத்தி வைக்கலாம்.
அந்த இடங்களில் நெரிசல் அதிகம் இருந்தால், பூங்காவைச் சுற்றி நிறுத்தலாம். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறாகப் போலீஸாரே செயல்படுவது, அவர்களுக்கு நிச்சயம் அவப்பெயரையே ஏற்படுத்தித் தரும் என்றும் சுற்றுலாப் பயணிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள், அரசு கட்டடங்கள் அருகே வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை எனும் பலகைகளை வைத்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீஸாரே, இப்படி நோ-பார்க்கிங் பகுதியில் தங்களது வாகனத்தை நிறுத்தினால், மற்றவர்கள் எப்படி போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவார்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.