முகப்பு
தமிழ்நாடு

ஆணை பிறப்பித்தும் அமலாகாத பள்ளி நலக் கல்வித் திட்டம்

திருவாரூர்: கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழக அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டு, அரசு ஆணை பிறப்பித்தும் இன்னமும் அமல்படுத்தபடாத பள்ளி நலக் கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் அமல் செய்ய வேண்ட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:18 AM
பகிர்:

திருவாரூர்: கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழக அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டு, அரசு ஆணை பிறப்பித்தும் இன்னமும் அமல்படுத்தபடாத பள்ளி நலக் கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் அமல் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

 தமிழக மாணவர்கள் நல்லறிவும், நன்னடத்தையும், வாழ்வியல் திறனையும் படிக்கும் காலத்திலேயே பெற வேண்டும் என்ற நோக்கில், 1996-ம் ஆண்டு பள்ளி முழுக் கல்வித் திட்டம் என்ற பாடத் திட்டம் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டது.

 தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், ஆஸ்திரேலிய நாட்டு கல்வியாளர் டாக்டர் காலின். எல். யர்ஸôமும் இணைந்து இதை தயாரித்தனர். தமிழ்நாட்டு பாடநூல் கழகம் சார்பில், கவிஞர் மணமேடு குருநாதன் என்பவரை பதிப்பாசிரியராக கொண்டு இந்தப் பாடப் புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வகுப்பு வரையில் மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய பாடங்கள் வகுப்பு வாரியாக மாணவர்களின் அறிவுத் திறன், வயதுக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

 இந்த பாடத் திட்டத்தில், குழந்தைகளுக்கான உரிமைகள், மனிதனின் முழு உடலியல் நல வாழ்வு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நல வாழ்வு, சத்துணவு, கற்றல் முறை, நுகர்வோர் நல வாழ்வு, குழுப் பணிகள், சாலைப் பாதுகாப்பு, யோகா கற்பிக்கும் முறை, தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு என அனைத்து விஷயங்களும் பாடங்களாகவும், செயல்முறை வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன. 211 பக்கங்களை கொண்ட இந்தப் புத்தகத்தை தமிழக அரசு அங்கீகரித்தது.

 இந்தப் புத்தகத்தின் கருத்துகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 22.5.2003 அன்று தமிழக அரசின் அப்போதைய பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பொறுப்பு வகித்த வி.கே. சுப்புராஜ், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்துப் பள்ளிகளிலும் உடல் நலம் மற்றும் சுகாதாரம் குறித்தான பாடத்தை அறிமுகப்படுத்த (அரசாணை நிலை எண் 63) ஆணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, 2003-04-ம் கல்வியாண்டு முதல் இந்தப் புத்தகம் ஆசிரியர் கையேடாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 இதற்காக பள்ளி நலக் கல்வித் திட்ட தயாரிப்பு குழு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தி, இந்தப் புத்தகம் பற்றியும், அதை பள்ளிகளில் போதிக்க வேண்டியது பற்றியும் அறிவுரைகள் வழங்கியது.

 கூட்டம் முடித்து, பள்ளிக்கு திரும்பிய தலைமை ஆசிரியர்கள் நலக் கல்வித் திட்டத்தையும் மறந்தனர். அரசின் ஆணையும் காகித அளவிலேயே தொடர்கிறது. இதுகுறித்து பாடத் திட்ட தயாரிப்பு குழுவின் மூலம் பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தப் பலனும் இல்லை.

 இதுகுறித்து இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் மணமேடு குருநாதன் கூறியது:

 பள்ளி நலக் கல்வி குறித்து பாடத் திட்டம் உருவாக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், 1996-ல் அனைத்து நாடுகளின் நலக் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இரவு, பகல் பாராமல் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் 16 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

 மாணவச் சமுதாயத்தை முறைப்படுத்த கல்விக் கூடம் மட்டுமே சரியான களம். கல்வித் துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் பள்ளி நலக் கல்வித் திட்டத்தையும் நிச்சயம் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

 வகுப்பறையிலேயே மாணவன் ஆசிரியரை கொலை செய்யும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு விரும்பதகாத நிகழ்வுகள் மாணவ சமுகத்தில் புரையோடி கிடக்கின்றன. எனவே, மாணவ சமுதாயத்தை சீர்படுத்த, உடனடியாக பள்ளி நலக் கல்வித் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.