கேள்விக்குறியாகும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை!
பொள்ளாச்சி: புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை கேள்விக்கு
பொள்ளாச்சி: புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம்- களக்காடு முண்டந்துறை, நீலகிரி மாவட்டம்- முதுமலை, கோவை மாவட்டம்- ஆனைமலை ஆகிய பகுதிகளில் புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இதில் 958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்திரா காந்தி வன உயிரின சரணாலயம், கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசால் ஆனைமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 34 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுவதற்கு முன், மலைவாழ் மக்கள் வனத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும், வனத்தில் கிடைக்கும் தேன், சிகைக்காய், நெல்லி போன்ற பொருள்களைச் சேகரித்து, கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்தனர்.
ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மலைவாழ் மக்கள் காடுகளில் பொருள்களைச் சேகரிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதைத் தொடர்ந்து, சுற்றுலா வழிகாட்டி, சுற்றுச்சூழல் பாதுகாவலர், வேட்டைத் தடுப்பு காவலர், விருந்தினர் மாளிகைகளில் சமையல் பணி மற்றும் காவலர் போன்ற பணிகளில் மலைவாழ் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் அஜய் துபே என்பவர் "புலிகள் சரணாலயப் பகுதியில் உணவகங்கள் மற்றும் சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்துவதால் வன விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வருகின்றன. அதனைத் தடுக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
"இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு வழங்கும் வரை, புலிகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலா செல்ல அனுமதிக்கக் கூடாது' என்று நீதிபதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட மூன்று புலிகள் சரணாலயங்களும் புதன்கிழமை முதல் மூடப்பட்டன.
இதன் விளைவாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலாத் தலமான டாப்சிலிப், வால்பாறை, பஞ்சலிங்க அருவி, சின்னாறு, மானாம்பள்ளி ஆறு, சின்னக் கல்லாறு, குரங்கு அருவி ஆகிய சுற்றுலாத் தலங்களில் பணியாற்றி வந்த 100க்கு மேற்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொள்ளாச்சி வட்டப் பொறுப்பாளர் துரைசாமி கூறியது:
வனத்தில் சேகரிக்கும் பொருள்களை மலைவாழ் மக்கள் விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டை விட்டு மலைவாழ் மக்கள் வெளியேற இந்த உத்தரவு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.