கோயம்பேடு - பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை: 2013 டிசம்பரில் சோதனை ஓட்டம்
சென்னை, ஜூலை 22: சென்னை கோயம்பேடு - பரங்கிமலை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் 2013 டிசம்பரில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் உயர் அதிகாரி தெரிவித்தார். கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான
சென்னை, ஜூலை 22: சென்னை கோயம்பேடு - பரங்கிமலை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் 2013 டிசம்பரில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் உயர் அதிகாரி தெரிவித்தார்.
கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் பெருமளவில் முடிந்துவிட்டன.
கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை ஜூன் வரை 1079 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இப்பகுதியில் 1150 தூண்கள் அமைக்கப்பட வேண்டும்.
Advertisement
அசோக் நகர் முதல் பரங்கிமலை வரை 345 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று தூண்கள் அமைத்தால் இப்பகுதியின் கட்டுமானப் பணிகள் முடிவடையும்.
மார்ச் மாதம் வருகை: மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பிரேசில் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டு (2013) மார்ச் மாதம் வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ரயில் பெட்டிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் புராஜெக்ட்ஸ் இந்திய லிமிடெட் கன்சார்டியம் தயாரித்து வருகிறது. முதல் கட்டமாக வரவுள்ள 36 மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தவிர்த்து மற்ற பெட்டிகள் அனைத்தும் ஆல்ஸ்டாம் நிறுவனம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஸ்ரீ சிட்டியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வழங்கும். இந்த ரயில் பெட்டிகளைத் தயாரிக்க ஆல்ஸ்டாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ரயில் பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து வழங்குவதோடு, சோதனை ரீதியாக இயக்கவும், இது தொடர்பான பயிற்சி அளிக்கவும், ரூ. 1,471 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த நிறுவனம் 168 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கவுள்ளது.
முதல் கட்டம்: முதல் கட்டமாக இந்த வழித்தடத்தில் கோயம்பேடு - பரங்கிமலை இடையில் அடுத்த (2013) ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாமதமானால் 2014 ஜனவரியில் இயக்கப்படும். கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுகிறது. இந்தப் பாதையில் மேம்பாலம் வழி தடத்தில் மெட்ரோ ரயில் செல்லும்.
மெட்ரோ ரயில் பணிமனை: கோயம்பேட்டில் 68 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளுடன் நிர்வாக அலுவலகம், ஒட்டுமொத்த மெட்ரோ ரயில்களை இயக்கக்கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு மையம், மெட்ரோ ரயிலை நிறுத்துவதற்கான இடமும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனையும் இங்கே பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
மேம்பால ரயில் நிலையங்கள்: கோயம்பேடு - பரங்கிமலை வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள் மேம்பாலத்திலும் அமைக்கப்பட உள்ளன.
கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் ரயில் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர் கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை இடையே பூமிக்கு மேல் பாலத்திலும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.