கடலூர், ஜூன் 13: காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
÷ஆண்டுதோறும் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தென்மேற்குப் பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்தால் சம்பா சாகுபடி செய்ய முடியும் என பருவமழையை எதிர்நோக்கியுள்ளனர் விவசாயிகள்.
÷தென்மேற்குப் பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் 76 நாள்கள் மட்டுமே பெய்யும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட அளவு மழை பெய்யவில்லை.
÷கடந்த காலத்தில் தென்மேற்குப் பருவமழை தாமதப்பட்டதாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும், ஆழ்குழாய் கிணறு இயக்க தொடர் மின்சாரம் இல்லாததாலும் படிப்படியாக ஆண்டுதோறும் குறுவை சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
÷கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை சாகுபடி 25 முதல் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வந்தது. இது படிப்படியாக குறைந்து நடப்பாண்டில் 2500 ஏக்கர் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது.÷1934-ம் ஆண்டு முதல் மேட்டூர் அணையில் இருந்து 77 முறை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.÷இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12-ல் 15 முறையும், ஒரு முறை ஜூன் 6-ம் தேதியும் திறக்கப்பட்டுள்ளது.
÷காவிரி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 16,300 சதுர மைல், கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்தால் ஹேமாவதி அணை நிரம்பி கிருஷ்ணராஜ சாகர் அணை வந்து பின்னர் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும்.
÷கேரளத்தை பொறுத்தவரை வயநாடு பகுதியில் மழை பெய்தால்தான் கபிணி அணைக்கு தண்ணீர் வரும். ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 96 டி.எம்.சி., தமிழகத்தின் மேட்டூர் அணையில் நீர் கொள்ளளவு 94 டி.எம்.சி., தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மழை பெய்யும்.
÷தமிழக கடலோரப் பகுதியில் நீர் தேக்கி வைக்க கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
÷தென்மேற்குப் பருவமழை காரணமாக மேட்டுர் அணைக்கு வெள்ள அபாயம் ஏற்படும்போது கொள்ளிடம் ஆற்றில் வடிய செய்த வகையில் 1990 முதல் 2011 வரையில் 1108.14 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்குச் சென்றுள்ளது.
÷இந்த தண்ணீர் 11 ஆண்டுகள் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்திய நீரைவிட 5 மடங்கு அதிகம்.
÷தற்போது இருக்கக் கூடிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.26 அடி. நீர்வரத்து 1158 கனஅடி. ஜூன் மாதம் முதல் வாரத்தில் மழை பெய்து அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே, ஜூன் மாதம் வழக்கம்போல் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. நடப்பாண்டில் இந்த வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது.
÷தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து அதிக மழை பொழிவு இருந்தால் மட்டுமே கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும்.
÷சமீபகாலமாக காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி மாதம்தோறும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு நிர்ணயித்த போதிலும், தீர்ப்பின் அடிப்படையிலும் கர்நாடகம் தண்ணீர் தரவில்லை.
÷ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரையில் 5 டி.எம்.சி., தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் வந்தது 1.5 டி.எம்.சி., தண்ணீர்தான். இதே நிலை நீடித்தால் தமிழக டெல்டா விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
÷எனவே தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை நிர்பந்தித்து தமிழகத்துக்கு நியாயமாக, தீர்ப்பின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற்று சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற வேண்டும்.
÷அப்போதுதான் அனைத்து காவிரி டெல்டா கடைமடைப் பாசன பகுதியில் செப்படம்பர் மாதம் சம்பா நடவுப் பணி தொடங்கும்.
÷தமிழகத்தைச் சேர்ந்த கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தமிழக அரசு எடுக்க கூடிய நடவடிக்கைக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் கீழ்அனுவம்பட்டு தலைவர் பி.ரவீந்திரன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.