முகப்பு
தமிழ்நாடு

மாதக் கணக்கில் இயங்காத தொலைபேசிகள்

திருவள்ளூர், ஜூன். 21: பி.எஸ்.என்.எல் தொலைபேசிகள் தொடர்ந்து மாதக்கணக்கில் இயங்காததால் அச்சேவையில் பொன்னேரி மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்களை இழந்து பொன்னேரி பி.எஸ்.என்.எல்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:50 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:19 PM

திருவள்ளூர், ஜூன். 21: பி.எஸ்.என்.எல் தொலைபேசிகள் தொடர்ந்து மாதக்கணக்கில் இயங்காததால் அச்சேவையில் பொன்னேரி மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

இதனால், வாடிக்கையாளர்களை இழந்து பொன்னேரி பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம் மூடுவிழாவை நோக்கி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். பொன்னேரி கோட்டத்தில் மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொலைபேசி இணைப்பகங்களும், இலவம்பேடு, பழவேற்காடு, திகில்பாளையம், அத்திப்பேடு, ஆரம்பாக்கம், சுண்ணாம்புக்குளம், மாதர்பாக்கம், கவரைப்பேட்டை, ஆரணி உள்ளிட்ட கிளை இணைப்பகங்களும் உள்ளன.

Advertisement

இப்பகுதிகளில், மொத்தம் 4500 தொலைபேசி இணைப்புகள் உள்ளன. இந்நிலையில், தொலைபேசி பழுதானால், அதனைச் சரி செய்ய பி.எஸ்.என்.எல். சார்பில் சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது தொலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை 2500 ஆக குறைந்து விட்டதாகச் கூறப்படுகிறது.

தொலைபேசி பழுதை சரி செய்யும் பணியில் வெறும் 4 ஒப்பந்த ஊழியர்களே உள்ளனர். இதன் காரணமாக, தொலைபேசி சந்தாதாரர்கள் புகார் செய்தால் உடனே பழுதை சரி செய்ய முடியாத நிலை உள்ளது.

மேலும் பொன்னேரி இணைப்பகத்தில் 3-ஜி செல்போன் சேவையும் சரிவர கிடைப்பதில்லை எனவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதே போல், இலவம்பேடு தொலைபேசி இணைப்பகத்தில் முதலில் 500 இணைப்புகள் இருந்தன. ஆனால், இப்போது அவையும் குறைந்து விட்டன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் பக்தவத்சலம் கூறியது:

தொலைபேசி இணைப்புகள் பெரும்பாலான நாள்கள் சரிவர இயங்குவதில்லை. கடந்த 20 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். சார்பில் சிறப்பான சேவை அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது சேவை குறைப்பாட்டால் தனியார் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர்.

பொன்னேரி கோட்ட அலுவலகத்தில் கிடைக்கும் பல்வேறு சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. மேலும் அனைத்து தொலைபேசி இணைப்பகங்களிலும் ஆட்கள் பற்றாக்குறை, ஜெனரேட்டர் இல்லாத காரணங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பி.எஸ்.என்.எல். சேவையை மேம்படுத்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் பொதுத்தேர்வு முடிவுகளை கூட இணையதளத்தில் சரிவர காண முடியாத நிலைமை ஏற்பட்டது என்றார் அவர்.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ஐ பாதுகாக்கவும், வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மாறுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



அதிகாரி விளக்கம்

பொன்னேரி கோட்டத்தில் 2 உதவிப் பொறியாளர்கள், 3 தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளனர். ஆள் பற்றாக்குறை எதுவும் இல்லை. சாலை விரிவாக்கப் பணிக்காக பல்வேறு இடங்களில் தோண்டப்படுவதால் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்படுகின்றன. இதனால் தொலைபேசிகள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன.

நுகர்வோரின் பிரச்னைகளையும், குறைகளை களையவும், பிஎஸ்என்எல் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றார்.

தொலைபேசி பழுதை சரிசெய்யும் பணியில் 4 ஒப்பந்த ஊழியர்களே உள்ளனர். இதன் காரணமாக, தொலைபேசி

சந்தாதாரர்கள் புகார் செய்தால் உடனே பழுதை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.