புதுவையில் மணல் அள்ள வாய்ப்பு இல்லை
புதுச்சேரி, செப். 4: புதுச்சேரி மாநிலத்தின் கட்டுமானப் பணிகளுக்குத் தற்போது வரை வந்து கொண்டிருந்தது தமிழகப் பகுதிகளில் அள்ளப்படும் மணல்தான். தமிழகத்தை விட்டு மணலை வெளியே கொண்டு செல்லத் தடை இருப்பதைக்
புதுச்சேரி, செப். 4: புதுச்சேரி மாநிலத்தின் கட்டுமானப் பணிகளுக்குத் தற்போது வரை வந்து கொண்டிருந்தது தமிழகப் பகுதிகளில் அள்ளப்படும் மணல்தான்.
தமிழகத்தை விட்டு மணலை வெளியே கொண்டு செல்லத் தடை இருப்பதைக் காரணம் காட்டி, லாரிகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்துக்குத் தமிழகத்தின் மணல் கிடைக்க இரு மாநில அரசுகளும் பேசி, சட்டவிரோதமாக நடைபெற்று வந்த வணிகத்தை, முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதுச்சேரி மாநில மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Advertisement
இதை நிறைவேற்றாவிட்டால், புதுச்சேரி மாநிலத்தில் எந்த கட்டுமானப் பணிகளும் எதிர்காலத்தில் நடைபெறாத சூழல் ஏற்பட்டுவிடும்.
புதுச்சேரி மாநிலத்தில் சங்கராபரணி ஆறு மட்டுமே நீண்ட தூரம் செல்கிறது. இதில் மட்டுமே 4 இடங்களில் தற்போது மணல் அள்ள வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஓரிரு வாரங்கள் மட்டுமே அள்ள முடியும். மழை வந்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே தமிழகப் பகுதியிலிருந்து மணல் புதுச்சேரி பகுதிக்கு வந்து சேரும். தற்போது இந்த ஆற்றில் மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென புதுச்சேரி மணல் லாரி உரிமையாளர்களிடம் முதல்வர் என்.ரங்கசாமி உறுதியளித்துள்ளார். ஆனால், இரு வாரங்களுக்குப் பிறகு நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்குறி அனைவரிடமும் எழுந்திருக்கிறது.
பூகோள ரீதியாக, புதுச்சேரியும், தமிழகமும் பின்னலான பகுதிகள். தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள், புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்த பிறகே, மீண்டும் தமிழகப் பகுதிக்குள் வர முடியும் என்ற சூழல் உள்ளது.
எனவே, கடலூரிலிருந்து மரக்காணம் செல்ல வேண்டிய மணல் லாரிகள், புதுச்சேரி வழியாகவே இதுவரை பயணித்து வந்தன. இவ்வாறு செல்வதால், தூரம், டீசல் செலவு, வாகனத் தேய்மானம் அனைத்தும் குறைவு.
தற்போது புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதித்திருப்பதால், இவை விழுப்புரம், திண்டிவனம் வழியாக மரக்காணம் செல்ல வேண்டியிருக்கும். இதனால் விற்பனை விலை உயரும் என்கின்றனர் மணல் லாரி உரிமையாளர்கள்.
மேலும் இதைக் காரணமாக வைத்துதான், புதுச்சேரி மாநிலத்துக்கும் மணல் விநியோகம் செய்து வந்தனர். தமிழகத்தில் மணல் குவாரிகளில் வழங்கப்படும் "பர்மிட்' எனப்படும் அனுமதிச்சீட்டில், தமிழகப் பகுதிகளுக்குள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என உள்ளது.
தற்போது தமிழக எல்லையிலேயே மணல் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால், புதுச்சேரி மாநிலத்துக்குக் கிடைத்து வந்த மணல் முற்றிலுமாகத் தடைபட்டுவிட்டது.
தமிழகமும், புதுச்சேரியும் ஏட்டளவில் வெவ்வேறு மாநிலங்கள் என்றாலும், மற்ற அனைத்து கலாசாரம், பண்பாடு, தொழில், அரசியல் ரீதியில் ஒன்றிணைந்த மாநிலங்களாகவே உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் தனியாக கல்வி வாரியம் கிடையாது. அதனால், தமிழக அரசே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை நடத்துகிறது. தமிழக அரசு பாடநூல் கழகத்திடம் பணம் செலுத்தியே, புதுச்சேரிக்கான புத்தகங்களும் பெறப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வையும் தமிழக அரசுதான் நடத்தி
வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளே இங்கு அதிகம் இயங்குகின்றன. இதுபோல பல உதாரணங்கள் உள்ளன.
எனவே, இந்த மணல் விவகாரத்திலும், தமிழகம், புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் மட்டத்தில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, தமிழகத்தின் மணல் புதுச்சேரியிலும் முறைப்படி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரணம், புதுச்சேரியில் கட்டுமானப் பொருள்களுக்கான மூலப்பொருள்கள் உற்பத்தி கிடையாது. சிமென்ட், ஜல்லி, இரும்பு, மணல் போன்றவை தமிழகத்திலிருந்துதான் வருகின்றன. எனவே, பிற கட்டுமானப் பொருள்களோடு, மணலையும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதிலும் அரசியல்...
தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ள சூழலில், புதுச்சேரி மாநிலத்து மக்களின் நலன் கருதி மணல் விநியோகிக்க தமிழக அரசு முன்வந்தால், அரசியல் ரீதியாகவும் அதிமுகவுக்கு நன்மதிப்பு கிடைக்கும்.
இல்லையெனில், மக்களிடையே மணல் தட்டுப்பாடு ஏற்படும்போது, மணல் கொடுக்க கூட அண்டை மாநிலமான தமிழகம் முன்வரவில்லை. கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி மக்களிடையே எழும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஆனாலும், இதில் அரசியல் பாராமல், தமிழக அரசோடு பேசி மணல் பெற புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி முன்வர வேண்டுமே என்ற அச்சமும் இவர்களுக்கு இருக்கிறது.