சென்னை மாநகரில் இயங்கிவரும் ஹோட்டல்கள் அனைத்திலும் ரகசிய கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாதில் அண்மையில் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 119 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் குண்டு வைத்த நபர்களைக் கண்டறிய சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் காவல்துறைக்கு பேருதவியாக இருந்தன.
இதனை கருத்தில்கொண்டு இந்த உத்தரவை மாநகர போலீஸ் பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
ஹோட்டல்கள் மட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட தனியார்வசம் உள்ள பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகள் அனைத்திலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஹோட்டல்களில் வரவேற்பு பகுதி, வாகனங்கள் நிறுத்தும் பகுதி, விருந்தினர்கள் அறைகளுக்குச் செல்லும் வழி, உணவு அருந்தும் பகுதி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு ஹோட்டல் உரிமையாளர்களிடம் காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் 50-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்களும், இவை தவிர 5 ஆயிரத்துக்கும் மேலான நடுத்தர ஹோட்டல்களும் உள்ளன. இவை தவிர நூற்றுக்கணக்கான மேன்ஷன்கள், தங்கும் விடுதிகள் உள்ளன.
பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர பெரிய அளவிலான மேன்ஷன்கள், தங்கும் விடுதிகள் சிலவற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
எனினும் எஞ்சியுள்ள இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அண்மையில் காவல் துறையினர், ஹோட்டல்கள், மேன்ஷன்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுடன் கலந்து பேசி ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இக் கூட்டத்தில் ஹோட்டல்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும், தங்கும் நபர்களின் புகைப்படத்துடன் அடையாள அட்டை நகலை நிர்வாகத்தினர் வாங்கி வைத்திருக்க வேண்டும், அவர்களது செல்போன் எண்களைப் பெற்று, அது செயல்படுகிறதா என சோதனை செய்து பார்க்க வேண்டும். உடமைகளைச் சோதனையிட வேண்டும், வெளிநாட்டினர் தங்கினால் அவர்களது விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களைப் பெற்று அப் பகுதியில் காவல் நிலையங்களில் கொடுக்க வேண்டும், ஹோட்டலுக்கு வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல், மேன்ஷன்கள், வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தையும் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்ய முடியும், மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் முன்னரே தடுக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
காவல் துறையினரின் விதிமுறைகள் ஏற்கத்தக்கவைதான் என்றாலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு அதிகம் செலவாகும். எனவே அவசரகதியில் அவற்றை அமைக்க முடியாது.
இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்கிறார் சென்னை ஹோட்டல் உரிமையாளர் சங்கச் செயலர் ஆர்.ராஜ்குமார்.
பான் கார்டு வேண்டாம்...
ஹோட்டல்களில் தங்க வருபவர்களிடம் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள என ஏதாவது ஒன்றின் நகல்களை வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் காவல் துறை, பான் கார்டு நகல்களை வாங்க வேண்டாம் எனவும் அவற்றில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
ஆனால் ஹோட்டல் உரிமையாளர்கள், தங்களது ஹோட்டலுக்கு தங்க வருகிறவர்கள் என்ன அடையாள அட்டை வைத்திருக்கிறார்களோ, அதன் நகலை மட்டுமே தங்களால் வாங்க முடியும் என கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.