நடைமுறைக்கு வருமா அதிநவீன சொகுசு பஸ்?
அதிக விலை காரணமாக ஒப்பந்தப் பணிகள் ஆரம்பகட்ட நிலையிலேயே தடைபட்டுள்ளதால் அதிநவீன சொகுசு பஸ் திட்டத்தை
அதிக விலை காரணமாக ஒப்பந்தப் பணிகள் ஆரம்பகட்ட நிலையிலேயே தடைபட்டுள்ளதால் அதிநவீன சொகுசு பஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பஸ் பயணிகளுக்கு விமானப் பயணத்துக்கு இணையான பஸ் வசதியை அளிக்கும் வகையில், தொலைதூர பயணங்களுக்கு அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நிறுவனங்களின் அதிக விலை குறியீடு காரணமாக இந்தத் திட்டம் ஆரம்பகட்ட நிலையிலேயே தடைபட்டு நிற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
Advertisement
இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற வகையில், குளிர்சாதன வசதி, சொகுசு இருக்கைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன்கூடிய அதிநவீன சொகுசு பஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த பஸ்கள் கட்டுமானத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 1 கோடி வரை செலவாகும்.
இந்தத் திட்டம் தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என்றார்.
இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள், சேசிஸ்களுக்கு அதிக விலை குறிப்பிடுவதாலும், உயர் அதிகாரிகள் மறைமுக கமிஷனை உயர்த்தியிருப்பதுமே திட்டங்கள் தடைபட்டு நிற்பதற்கு முக்கியக் காரணம் என போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது:
அதிநவீன சொகுசு பஸ்கள் மட்டுமன்றி, நடப்பு ஆண்டுக்கு அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3,000 கூடுதல் பஸ்களுக்கான ஒப்பந்தப் பணிகளும் ஆரம்பகட்ட நிலையிலேயே தடைபட்டு நிற்கின்றன.
இதற்கு தனியார் நிறுவனங்கள் அதிக விலை குறிப்பிடுவது ஒரு காரணம் என்றபோதும், அதிகாரிகள் மறைமுகமாக தங்களுக்கான கமிஷனை அதிகரித்திருப்பதும் முக்கிய காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை 8 சதவீதமாக கேட்கப்பட்டு வந்த கமிஷன் தொகை, இப்போது 18 முதல் 20 சதவீதம் அளவுக்கு கேட்கப்படுவதாக தனியார் நிறுவனங்கள் சில புகார் தெரிவிக்கின்றன.
அரசின் கவனத்துக்குச் செல்லாமல், அதிகாரிகள் மேற்கொள்ளும் இதுபோன்ற மறைமுக செயல்களால்தான் சிறந்த திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது என்றார் அவர்.