ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கிவரும் செல்போன் தயாரிக்கும் நோக்கியா ஆலையில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் மென்பொருள் தொழிற்பூங்காவில் செல்போன் தயாரிக்கும் நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் சுமார் 12000 தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இத்தொழிற்சாலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரிபாகங்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வரிஏய்ப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இத்தொழிற்சாலையில் சென்னையை சேர்ந்த 3 குழுக்களைக் கொண்ட வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முக்கிய ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டதாக தெரிகிறது. இதேபோல் கடந்த மாதம் 8-ம் தேதி நோக்கியா தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.