முகப்பு
தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளிடமிருந்து "காஸ்ட்லி' செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளிடமிருந்து "காஸ்ட்லி' செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்கும் பணியில் ரயில்வே போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதிக விலையுள்ள செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபடுகிறது.

இந்தத் திருட்டில் ஈடுபடுபவர்கள் ரூ.2,000 முதல் ரூ.6,000 வரையிலான செல்போன்களை திருடுவதில்லை. இவர்கள் குறிவைப்பது ரூ.8,000 முதல் ரூ.40,000 வரையுள்ள செல்போன்களை மட்டுமே. ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள், பண்டிகை கால கூட்ட நெரிசல் ஆகிய சந்தர்ப்பங்களில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி இந்த திருட்டுகள் நடைபெறுவதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement

வடமாநிலக் கும்பல்: இந்த திருட்டுகளில் பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் ஈடுபடுகின்றனர். 6 அல்லது 8 பேர் அடங்கிய குழுவாக சென்னைக்கு வரும் இவர்கள் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் தங்கிகொள்கின்றனர்.

பின்னர் சென்ட்ரல், எழும்பூர் மற்றும் இதர ரயில் நிலையங்களுக்கு குழுவாகச் சென்று பயணிகளின் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபடுகின்றனர்.

திருடிய செல்போன்களை தங்களது சொந்த மாநிலத்துக்கு எடுத்துச் சென்று விற்று விடுகின்றனர். இதன் மூலம் இவர்கள் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர்.

செல்போனில் புகார் தெரிவிக்கலாம்... இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சேகர் கூறியது: கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டு குறைந்துள்ளது. இப்போதெல்லாம் செல்போன் திருடுபவர்களை தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் கண்டுபிடித்து விடுகிறோம். இதன் காரணமாக செல்போன் திருட்டு ஓரளவுக்கு குறைந்துள்ளது.

ரயிலில் பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ரயில்வே போலீஸார் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றனர்.

ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது பயணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே 99625-00500 என்ற இலவச செல்போன் எண்ணை தொடர்புகொண்டு ரயில்வே போலீஸ் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் சேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments