சிகரெட் வாங்கினால் பரிசு: அன்புமணி கண்டனம்
சிகரெட் வாங்கினால் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற விளம்பரத்துக்கு பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிகரெட் வாங்கினால் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற விளம்பரத்துக்கு பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புகை பிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகைபிடித்தலால் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக் காசு பரிசு என்ற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்து வருகிறது.
சிகரெட்டுடன் இலவசப் பரிசுகள் எதையும் அளிக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைப் பொங்கல் பரிசாக அளிப்பது மிகக் கொடுமையான செயல். இந்த சட்டவிரோதச் செயலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.