முகப்பு
தமிழ்நாடு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:07 AM
பகிர்:

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் ஒப்புதலை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (ந.க.எண்.37718) கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் ( Aided School), சிறுபான்மை (Minority School) மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமென குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில், 23-8-2010லிருந்து, அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் நியமனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால் அந்த நியமனத்தை ரத்து செய்து, அதுதொடர்பான ஆணையினை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அனுப்ப வேண்டும்.

மேலும் அது தொடர்பான விவரங்களையும், ரத்து ஆணையின் நகலினையும் தொலைநகலி மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.