குண்டும், குழியுமாக மாறிப்போன கிராமச் சாலை!
திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நத்தம் கிராமச் சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நத்தம் கிராமச் சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
நத்தம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்க்கு செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தார்சாலையாக மாற்றப்பட்டது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அச்சாலை மிகவும் பழுதடைந்து விட்டது. குறைந்த தரத்தில் சாலை அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மாம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், மாம்பாக்கசத்திரம், ஜனாகாபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் நாள்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க திருத்தணிக்கு வருவதற்கு இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அகூர் கிராமத்தில் இருந்து நத்தம் கிராமம் வழியாக கோரமங்கலம் இருளர் காலனி வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் வரை மிகவும் பழுதடைந்துக் காணப்படுகிறது.
மேலும் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. தற்போது சாலை முழுவதும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.