சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பள்ளிக் கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டடம் இரவு நேரங்களில்
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷திருத்தணி காந்தி சாலையில் இயங்கி வருகிறது டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
÷கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணி ம.பொ.சி. சாலை ஆலமரத் தெருவில் அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. பின்னர் ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் புதிய கட்டடம் கட்டப்பட்டதால் அரசு பொது மருத்துவனை இடம் மாற்றம் செய்யப்பட்டது.÷அப்போது இடநெருக்கடியில் படித்து வந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவமனை கட்டடத்தை பள்ளிக்கூடமாக மாற்றி தரும்படி நகராட்சி நிர்வாகத்திடம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
÷ஆனால் நகராட்சி நிர்வாகம் மறுத்ததால் ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்துக் கொண்டு அக்கட்டடத்தை ஆக்கிரமித்தது. அப்போது இங்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றனர்.
÷இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு இப்பள்ளி கட்டடத்தில் சுமார் ரூ. 1.80 கோடி செலவில் புதிய நபார்டு கட்டடம் கட்டப்பட்டது.
÷இதனைத்தொடர்ந்து, கடந்த 2012-ம் ஆண்டு ஆலமரம் தெருவில் இயங்கி வந்த மாணவர்களை அழைத்து வந்து தற்போது ஒரே பள்ளியில் 6-வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.
÷இந்நிலையில் பழைய பள்ளிக் கட்டடம் கவனிப்பாரற்று கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அங்கு வந்து மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
÷மேலும் கட்டடங்களில் இருந்த ஜன்னல், கதவுகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
÷எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வீணாக கிடக்கும் பழைய பள்ளிக் கட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.