காவல் நிலையம் என்றாலே புகார் கொடுப்பதற்கும், விசாரணைக்காகவும் செல்லும் இடம் என்பதை மாற்றி, அந்த வளாகத்தை சிறுவர்கள் விளையாடும் இடமாகவும், இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், போட்டித் தேர்வுகளுக்கான நூல்களைக் கொண்ட சிறு நூலகமாகவும் மாற்றியுள்ளனர் பாலக்கரை காவல் நிலையத்தினர்.
திருச்சி பாலக்கரை பருப்புக்காரத் தெரு முகப்புப் பகுதியில் இயங்கி வந்த பாலக்கரை காவல் நிலையம், ரயில்வே மேம்பாலப் பணிக்காக இடிக்கப்பட்டபோது, புதிய கட்டடம் கட்ட அப்போதைய காவல் ஆணையர் திரிபாதி, பாலக்கரை வேர்ஹவுஸ் பீச்சாங்குளம் காலனி பகுதிக்கு அருகில் புதிய இடத்தைத் தேர்வு செய்தார்.
வாடகைக் கட்டடத்தில் மேலப்புதூர் சுரங்கப்பாதை அருகே இயங்கி வந்த பாலக்கரை காவல் நிலையம், புதிய கட்டடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
சிறுவர்களுக்கு விளையாட்டு வசதி: காவல் நிலையத்துக்குள்ளேயே சிறுவர்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலையில், தற்போது இந்த காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுமியர் மன்றத்தில் மாலை நேரத்தில் உற்சாகமாக ஊஞ்சல், கேரம் போட்டிகளை விளையாடி வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள்.
இதுமட்டுமல்லால் இந்த வளாகத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக கர்லா கட்டை, பளு தூக்குதல் (எடை வாரியாக உள்ளது) போன்ற உடற்பயிற்சி சாதனங்களும் உள்ளன. மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டாலும், பகல் நேரங்களிலும் சிறுவர்களைக் காவல் நிலைய வளாகத்தில் காண முடிகிறது.
1971-இல் தொடங்கப்பட்ட பாய்ஸ் கிளப்: கடந்த 1971-ஆம் ஆண்டு பாலக்கரை பகுதியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் அப்போதைய டிஜிபி அருள் கலந்து கொண்டபோது, இளைஞர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பாய்ஸ் கிளப்பைத் தொடங்கினார். அதன் பின்னர் அந்த இடத்தில் மார்க்கெட் அமைக்கப்பட்டதால், தற்போது காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு பாய்ஸ் கிளப் மாற்றப்பட்டது.
காவல் நிலையத்தின் மேல்தளத்தில் பாய்ஸ் கிளப் இருந்ததால் சிறுவர்கள் மேல்தளத்துக்குச் செல்வதற்கு அச்சப்பட்ட நிலையில், தற்போது காவல் நிலைய வளாகத்தில் பாய்ஸ் கிளப் இருந்தாலும், சிறுவர்கள் விளையாடுவதால் சிறுவர் - சிறுமியர் மன்றமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறு நூலகமும் அமைகிறது: பாய்ஸ் கிளப் வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீசஸ், வங்கித் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் பல்வேறு புத்தகங்கள் உள்ளன. ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நிலையில், அவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான வசதி விரைவில் செய்யப்பட உள்ளது. இந்த வசதியும் விரைவில் கிடைக்கும் என்கிறார் பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் டி. ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.