இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு
மாநிலம் முழுவதும் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வெளியே வேலைக்குச் சென்றவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த அகதிகள் மறுவாழ்வு துறை
மாநிலம் முழுவதும் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வெளியே வேலைக்குச் சென்றவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த அகதிகள் மறுவாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கை தமிழ் அகதிகள் கள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவிற்கு 157 பேர் சென்றுள்ளனர். அவர்களை அந்நாட்டு கடற்படையினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த அகதிகள் மறுவாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் பெயர்கள், இத்துறை அனுப்பியுள்ள கள்ளத்தனமாக சென்றவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்க்கவும் கோரியுள்ளது.
ஒவ்வொரு முகாம்களிலும் எத்தனை பேர் என்பதையும், வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் சேகரித்து அகதிகள் மறுவாழ்வு துறைக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் அதிகாரிகள் அனுப்பி வைக்கவேண்டும். இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விவரங்கள் குறி்தது அந்தந்த மாவட்டத்தில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் ஆகியோர் மூலம் தகவல்கள் சேகரிக்க உள்ளனர்.
Advertisement
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில்,
இம்மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் மொட்டமலை, சிவகாசி வட்டத்தில் அனுப்பங்குளம், கண்டியாபுரம், செவலூர், அருப்புக்கோட்டை வட்டத்தில் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டத்தில் மல்லாங்கிணறு, விருதுநகர் வட்டத்தில் ஆனைக்குட்டம் ஆகிய 7 முகாம்களில் 1066 குடும்பங்களில் மொத்தம் மக்கள் தொகை 3490 பேர் தங்கியுள்ளனர்.
இந்த முகாம்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு கள்ளத்தனமாக சென்று சிறையில் அடைக்கப்பட்ட 157 பேர்களின் பெயர் பட்டியல் வட்டாட்சியர்(அகதிகள்) மூலம் அந்தந்த பகுதி வட்டாட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் வருவாய் அலுவலர்கள் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்வார்கள். அப்போது, முகாம்களில் உள்ள பெயர் பட்டியலில், கள்ளத்தனமாக சென்றவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பது குறி்தது ஆய்வு செய்து இறுதி அறிக்கையை அகதிகள் மறுவாழ்வு துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.