தனிநபர் கழிப்பறை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனிநபர் கழிப்பறை அமைப்பது தொடர்பாக மகளிர் குழுவினர் மற்றும் களத்தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனிநபர் கழிப்பறை அமைப்பது தொடர்பாக மகளிர் குழுவினர் மற்றும் களத்தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் சார்பில் தனிநபர் கழிப்பறை ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், களத்தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: அடுத்து வரும் 2015-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திறந்த வெளி கழிப்பறைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறையை ஏற்படுத்துவதற்கு இப்பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருக்கும். இத்தி்ட்டம் குறித்து மகளிர் சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் குழுவினர் மற்றும் வட்டார களத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பொதுமக்களிடையே தனிநபர் கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Advertisement
அதேபோல், களப்பணியாளர்கள், மகளிர் குழுவின் உறுப்பினர் ஆகியோர் அவரவர் வீடுகளில் தனிநபர் கழிப்பறை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதராணமாக இருக்கவும் வேண்டும். பொது இடங்களில் மலம் கழிப்பதால் ஏற்படும் தொற்றுநோய்கள், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். மகளிர் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெண்களிடம் எளிதில் பழக முடியும். அதனால் கிராமங்களில் தனிநபர் கழிப்பறைகளை ஏற்படுத்துவதற்கு மகளிர் குழுவினரின் பங்கு முக்கியம் ஆகும். எனவே கிராமங்களில் தனிநபர் கழிப்பறைகளை அமைக்க அதிகாரிகளுடன்
கள ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழு சுகாதார மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.