முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் உலக அமைதி வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்

வடக்குரதவீதியில் ஊர்வலத்தை மாவட்டத் தலைவர் கு.கிருபானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் வடக்குவீதியிலிருந்து புறப்பட்டு கீழவீதி, வேணுகோபால்பிள்ளைத்தெரு,

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

சிதம்பரத்தில் அனைத்து ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் சார்பில் உலக அமைதி வேண்டியும், இயற்கை சீற்றம் தணிய வேண்டியும் கஞ்சி கலய ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்குரதவீதியில் ஊர்வலத்தை மாவட்டத் தலைவர் கு.கிருபானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் வடக்குவீதியிலிருந்து புறப்பட்டு கீழவீதி, வேணுகோபால்பிள்ளைத்தெரு, கமலீஸ்வரன்கோயில்தெரு, தேரடிப்பிள்ளையார்கோயில் தெரு, பதினாறுகால் மண்டபத்தெரு வழியாக மீண்டும் வடக்குவீதியை அடைந்தது. பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கஞ்சிகலயத்தை தலையில் சுமந்து ஆதிபராசக்தி கோஷங்களுடன் சென்றனர்.

பின்னர் வடக்குவீதி நடராஜ க்ருபா மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் ஏ.சண்முகம் தொடங்கி வைத்தார். வட்டச் செயலாளர் டி.மணிவாசகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்கள் டி.எஸ்.எஸ்.பாலக்குமார், ஞானகுரு, மாவட்ட பொறுப்பாளர்கள் சி.பார்த்தசாரதி, வி.செல்வராஜ், வட்ட பொறுப்பாளர் வி.கண்ணன் ஆகியோர் ஆன்மீக சொற்பொழிவாற்றினர். நிகழ்ச்சியில் மன்ற பொறுப்பாளர்கள் மயூரா பிரபாககரன், ராஜசந்திரசேகர், மைதிலி, சண்முகசுந்தரி, கமல்நாதன், கோவிந்தராஜன், சந்திரா, பானு, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி வீதிவலம் வர அனுமதி மறுத்த போலீஸார்: ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஆதிபராசக்தி வழிபாட்டு கஞ்சி கலய ஆன்மீக ஊர்வலத்திற்கு, நான்கு வீதிகள் வலம் வர சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மன்ற நிர்வாகிகள் முறையிட்டதில் வீதிவலம் வராமல், வடக்குவீதி, கீழவீதி, கமலீஸ்வரன்கோயில், தேரடிபிள்ளையார்கோயில்தெரு வழியாக வலம் வர போலீஸார் அனுமதி வழங்கினர். மற்ற மதத்தினருக்கு வீதிவலம் வர அனுமதி வழங்கும் சிதம்பரம் கோட்ட போலீஸார், இந்துக்களின் ஆன்மீக ஊர்வலம் வீதிவலம் வர அனுமதி மறுப்பது, இந்துக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களுக்கு எதிரான செயலாகும் என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.