ஒசூர் அருகே மின்னல் பாய்ந்து 2 யானைகள் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனக்கோட்டத்தில் மின்னல் பாய்ந்து 2 காட்டு ஆண் யானைகள் உயிரிழந்ததாக வனத் துறையினர் உறுதிபடுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனக்கோட்டத்தில் மின்னல் பாய்ந்து 2 காட்டு ஆண் யானைகள் உயிரிழந்ததாக வனத் துறையினர் உறுதிபடுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனக் கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உள்பட்ட ஜவளகிரி காப்புக்காடானது கர்நாடக மாநிலம் பன்நர்கட்டா தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது. பன்னர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக ஒசூர் வனக் கோட்டத்தில் உள்ள ஜவளகிரி காப்புக் காட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், ஜவளகிரி நீர்நிலையின் அருகே 15 வயது நிறைந்த ஒரு ஆண் யானையும், சுமார் 7 வயது நிறைந்த ஆண் குட்டி யானை ஒன்றும் உயிரிழந்து கிடப்பதாக வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறை அலுவலர்கள், யானைகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். பின்னர், அரசு கால்நடை மருத்துவர்கள் பிரகாஷ், முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே யானைகளின் சடலங்களை ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் யானைகள் இரண்டும் மின்னல் பாய்ந்து உயிரிழந்தது என தெரியவந்ததாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.