தத்தெடுப்பு நிறுவனங்கள் தொடங்க தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு: ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்
விருதுநகர் மாவட்டத்தில் புதிய தத்தெடுப்பு நிறுவனங்கள் தொடங்கிட தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் புதிய தத்தெடுப்பு நிறுவனங்கள் தொடங்கிட தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதாரவற்ற மற்றும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப சூழ்நிலையான பாதுகாப்பு அளிக்கும் வகையில் தத்தெடுப்பு நிறுவனங்களை செயல்படுத்த வேண்டும். அந்த வகையில் குழந்தைகளின் அறிவாற்றலையும், செயலாற்றலையும் வெளிக்கொண்டு வரும் வகையில் மகிழ்ச்சி மற்றும் அன்பு சூழலை வெளிப்படுத்தவும் தத்தெடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் பெறப்படும் குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோர்களால் பராமரிக்க முடியாது என ஒப்படைத்த குழந்தைகள், பிரிந்து வாழும் பெற்றோரில் ஒருவர், விதவை, மனைவியை இழந்தவர், திருமணம் ஆகாதவர், கைவிடப்பட்டவர் மற்றும் ஆதாரவற்றோர் ஆகியோரால் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், மருத்துவமனை, ரயில் நிலையம், கோவில் வளாகம் உள்பட பொது இடங்களில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள், காவல் நிலையம், சைல்டு லைன் மூலம் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், குழந்தைகள் நலக்குழுமம் மூலம் தத்தெடுக்க எவ்வித தடையும் இல்லையென அறிவிக்கப்பட்டு பிறந்த குழந்தை முதல் 12 வயது வரையில் உள்ள குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர்.
Advertisement
இவை குழந்தைகள் நலகுழும பாதுகாப்பு சட்டம், 2000ம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2006ல் திருத்தியமைக்கப்பட்ட பாதுகாவலர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மூலம் குழந்தைகள் தத்து கொடுக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலர் செயல்படுவார்.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் புதிய தத்தெடுப்பு நிறுவனங்கள் தொடங்க விரும்பும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையும்மாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.