பலத்த காற்றால் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள வாழைமரங்கள் நாசம்: விவசாயிகள் வேதனை
பலத்த காற்று வீசியதால் அறுவடைக்கு தயாரகும் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் சுமார் ரூ.3 லட்சம் சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பலத்த காற்று வீசியதால் அறுவடைக்கு தயாரகும் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் சுமார் ரூ.3 லட்சம் சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சிவகங்கையை அடுத்துள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. இங்குள்ள வயல்களில் கண்ணன் 70 செண்ட் நிலத்திலும், அவரது தந்தை சீனிவாசன் 50 செண்ட் நிலத்தில் முறையே நாடு மற்றும் பூவை வாழை பயிரிட்டுள்ளனர். புதன்கிழமை அக்னிநட்சத்திரம் நிறைவு நாளன்று மாலையில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் 11 மாதமாக பாதுகாத்து வந்த சுமார் 1,300 மரங்கள் உள்ள இந்தத் தோட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. வெள்ளிக்கிழமை காலை வெளியூரிலிருந்து ஊருக்குத் திரும்பிய விவசாயிகள் தோட்டம் அழிந்தது கண்டு வேதனை அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அரசனூரில் இருந்து வாழைக்கட்டை ஒன்றுக்கு ரூ.5 என்ற விலையில் வாங்கி 8 அடி இடைவெளியில் ஒரு கட்டையை நட கூலியாக ரூ.7ம், உரம் போன்றவற்றிற்கு கட்டை ஒன்றுக்கு ரூ.60 செலவிட்டு கடந்த 11 மாதங்களுக்கு முன் வாழை பயிரிட்டோம். வாரத்திற்கு ஒருமுறை கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது கோடைக்காலமாக இருப்பதால் 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினோம்.
Advertisement
நாட்டு ரகம் பயிரிட்ட தோட்டத்தில் சுமார் 10 அடி உயரமும், பூவை ரகம் பயிரிட்ட தோட்டத்தில் 15 அடி உயரத்தில் வாழை மரங்கள் நன்கு வளர்ந்திருந்தது. ஒரு தாரில் சுமார் 150 வாழை காய்த்து அடுத்த மாதம் அறுவடை செய்ய இருந்த நிலையில் புதன்கிழமை வீசிய காற்றால் தோட்டம் நாசமானது.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக இது போன்ற இயற்கை இடர்பாடினால் எனது (கண்ணன்) தோட்டத்தில் சேதம் ஏற்பட்டு வருகிறது. வாழைக்கு பயிர் இன்சூரன்ஸ் இல்லாததால் பல மாதங்கள் உழைப்பும், செலவழித்த பணமும் வீணாகி வருகின்றது. நகைகளை அடகு வைத்து கடன் பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில் பயிர் நாசமாவது மிகுந்த வேதனயைத் தருகிறது. ஒரு வாழைத் தாரினை விற்றால் ரூ.450 கிடைக்கும் நிலையில் மரங்கள் சாய்ந்துள்ளது. இந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த மேலும் ரூ.10 ஆயிரம் செலவழிக்க வேண்டும் என்றனர்.
இந்த மாவட்டத்தில் திருப்புவனம் மற்றும் இளையான்குடி ஒன்றியங்களில் மட்டுமே வாழைக்கு பயிர் காப்பீடு உள்ளது. சிவகங்கை ஒன்றியத்தில் வாழைப் பயிருக்கு காப்பீடு இல்லை. இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் நாசமாகும் போது பயிர் காப்பீடு மூலம் நஷ்டஈடு வழங்க முடியாவிட்டாலும், வேறு ஏதாவது வகையில் விவசாயிகளுக்கு அரசு உதவ முன்வந்தால் தான் விவசாயம் தொடர்ந்து நடைபெறும். மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.