விருதுநகர் அருகே பைக் மீது லாரி மோதியது: குழந்தைகள் கண் முன்னே தந்தை சாவு
விருதுநகர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்
விருதுநகர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 குழந்தைள் காயம் அடைந்தனர். திருவிழாவிற்கு புத்தாடைகள் வாங்கிக் கொண்டு கிராமத்திற்கு திரும்பும் போது விபத்துச் சம்பவம் நடைபெற்றது.
விருதுநகர் அருகே செந்நெல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(37). இவர் கிராமத்தில் நடைபெற இருக்கிற திருவிழாவிற்காக குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்க இருசக்கர வாகனத்தில் தனது மகள் மதுபாலா(14), மகன்கள் மாதவன்(12), மகாதேவன்(9) ஆகியோரை ஏற்றிக் கொண்டு விருதுநகருக்கு வந்தார். அங்கு புத்தாடைகள் வாங்கிக் கொண்டு திங்கள்கிழமை இரவில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, தனியார் கல்லூரிக்கு அருகே செல்லும் போது எதிரே ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற லாரி, இருசக்கர வாகனம் மோதியது. இதில், தூக்கி வீசியெறியப்பட்ட பாலமுருகன் சம்பவ இடத்திலேயே படுகாயம் உயிரிழந்தார். மேலும், அவரது மூன்று குழந்தைகளும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 குழந்தைகளையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பாலமுருகனின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அவரது மனைவி கற்பகம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த ஆராய்ச்சிப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பாதமுத்துவை கைது செய்தனர்.