முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியேற்றி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றார்

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் தேசிய கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Updated On : 15 ஆகஸ்ட், 2015 at 5:15 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:57 AM

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் தேசிய கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார். அதன் பின் காவல் துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கௌரவம் செய்யும் வகையில் தியாகிகள், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ஆட்சியர் கதராடை அணிவித்து மரியாதை செய்தார்.

 அதையடுத்து முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38 ஆயிரத்திற்கான கல்வி உதவித் தொகையும், புதுவாழ்வு திட்டம் மூலம் 5 பேருக்கு பணி நியமன ஆணையும், 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வங்கி கடனுக்கான காசோலையும், ஊராட்சி அளவிலான 5 கூட்டமைப்புகளுக்கு ரூ.5 லட்மும், மகளிர் தொழில் குழுக்களுக்கு ரூ.2.92 லட்சம் நிதி உதவியும், மாநில அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற வீரருக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 5 பேருக்கு மோட்டார் பொறுத்திய தையல் இயந்திரமும், வேளாண்மை துறையின் மூலம் 3 பேருக்கு இடுபொருள்களையும், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் 10ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்ற ஒரு மாணவிக்கு ரூ.7 ஆயிரம் கல்வி உதவித் தொகையும், 35 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் என மொத்தம் 67 பேருக்கு ரூ.27.03 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 11 காவல் அதிகாரிகள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 8 அலுவலர்கள் ஆகியோருக்கு நாற்சான்றும், ஊரக வளர்ச்சி துறையில் விபத்தின்றி சிறப்பாக பணியாற்றிய 4 வாகன ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கத்தையும் அவர் வழங்கினார்.  

    பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், விருதுநகர் ஷத்திரிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாட்டிசியாபுரம் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, சாத்தூர் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாகஜோதி, வேளாண்மை துறை இணை இயக்குநர் பழனியாண்டி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.