விருதுநகர் அருகே போலீஸ் வேன் மீது மணல் லாரி மோதல்: 10 பேர் காயம்
விருதுநகர் அருகே கைதிகளை ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்ற வேன் மீது மணல் லாரி பின்புறமாக மோதிய விபத்தில் 7 போலீஸார் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே கைதிகளை ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்ற வேன் மீது மணல் லாரி பின்புறமாக மோதிய விபத்தில் 7 போலீஸார் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி காலனி, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் விட்டு இரவு நேரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
அதில், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த தங்கப்பன்(58), மதுரை புளியங்குளம் ஆறுமுகம்(30), திருநகர் சந்தோஷ்(27) ஆகியோரை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு விசாரணைக்காக திங்கள்கிழமை அதிகாலையில் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டி அருகே போலீஸ் வேன் சென்ற போது, காஞ்சிபுரம்-ஆலந்தூரிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாரதவிதமாக போலீஸ் வேனின் பின்புறமாக மோதியது.
இதில், வேனில் சென்ற பாண்டியன் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் அருண்குமார், காவலர்கள் மாரீஸ்வரன், சரவணக்குமார், பிரபு, சத்தியேந்திரன், கைதிகளான தங்கப்பன்(58), ஆறுமுகம(30), ச்ந்தோஷ்(27) மற்றும் லாரி டிரைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
உடனே சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தினர் காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூரைச் சேர்ந்த லாரி டிரைவர் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை நேரில் பார்வையிட்டு காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி ஆறுதல் கூறி விபத்து பற்றி கேட்டறிந்தார்.