விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது
விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்தது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்தது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் கருந்திரிகளை தயாரித்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாக போலீஸாருக்கு ரகசியல் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை காலையில் ஆத்திபட்டி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், சாக்கு பையில் 25 கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விசாரணை செய்ததில் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த பிச்சை என்பதும், கருந்திரி கட்டுக்களை பட்டாசு ஆலைக்குச் கொண்டுச் செல்வதாகவும் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், மீனாட்சிபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் சோதனையிட்டனர். அதில், இக்கிராமத்தைச் சேர்ந்த பாபுராஜ்(42), மாரிச்சாமி(48), சண்முகராஜ்(36) ஆகியோர் தயார் செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக வெம்பகோட்டை போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து தலா 20 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.