விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் அம்மா உணவகங்களில் ரூ.27.07 லட்சத்திற்கு விற்பனை
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மலிவு விலை உணவு விற்பனையின் மூலம் ரூ.27.07 லட்சம் கிடைத்துள்ளதாக நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மலிவு விலை உணவு விற்பனையின் மூலம் ரூ.27.07 லட்சம் கிடைத்துள்ளதாக நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சுகாதாரமான முறையிலும், மலிவு விலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் நகரங்களில் சுமை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவோர் பயனடையும் வகையில் அம்மா உணவகங்கள் சென்னையில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் இத்திட்டம் தொடங்கி செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி சாம்பாரும், 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பில்லை சாதம் ஆகியவைகளை மகளிர் மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மகளிர் குழுக்களால் சுகாதாரமான முறையில் தயார் செய்து குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அதில், இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம் ரூ.5ம், தயிர் சாதம் ரூ.3க்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சியில் பஜார், தலைமை மருத்துவமனை வளாகம், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல் நகராட்சிகளில் 8 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்ட 97 நாள்களில் ரூ.27.07 லட்சத்திற்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.