தாம்பரத்தில் விதியை மீறி கட்டிய மண்டபத்தை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தாம்பரத்தில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை உடனே இடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை உடனே இடிப்பதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமும், தாம்பரம் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிப்பதற்கு தாம்பரம் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மண்டபத்தின் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
விசாரணையின் போது விதியை மீற கட்டப்பட்டுள்ள மண்டபத்தை தனது சொந்த செலவில் ஜனவரி 2015க்குள் இடித்து விடுவதாக உரிமையாளர் வாக்களித்தார். எனினும் அவர் கட்டடத்தை இடிக்காமல், அங்கு வாடகைக்கு இருக்கும் கடைக்காரர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு அளித்தனர்.
Advertisement
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாடகைதாரர்கள் மீதான கோரிக்கையை பரிசீலிக்க சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிட்டது. எனினும், அக்கட்டடத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கடைகளுக்குப் பதிலாக 19 கடைகள் கட்டப்பட்டிருந்ததால், சி.எம்.டி.ஏ. அவர்கள் கோரிக்கையை நிராகரித்து.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.தேவதாஸ் ஆகியோர், இந்த உத்தரவு கிடைக்க பெற்ற 3 நாள்களுக்குள் திருமண மண்டபத்தை இடிப்பதற்கு உத்தரவிட்டனர்.
சி.எம்.டி.ஏ.வும், தாம்பரம் நகராட்சியும் இதை கண்காணித்து ஜனவரி 5 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.