வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க 14 மோப்ப நாய்கள்: தமிழகத்துக்கு விரைவில் வருகை
வனச் சரணாலயங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் சில நேரங்களில் விலங்கு வேட்டையாடப்படுகின்றன
வனச் சரணாலயங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் சில நேரங்களில் விலங்கு வேட்டையாடப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகவும் தமிழகத்துக்கு மோப்ப நாய்கள் வரவுள்ளன.
இதில், முதல் கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரணாலயத்துக்காக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து ஷைனி எனும் மோப்ப நாய் ஜூலை 24-ஆம் தேதி அனுப்பப்படுகிறது. இந்த முயற்சியை வனவிலங்கு தடுப்புப் பிரிவும் - உலக வனவிலங்கு நிதியமும் மேற்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க 14 மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி, போபாலில் உள்ள சிறப்பு காவல் படையில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இப்போது, தமிழகத்துக்கு வரும் ஷைனி எனும் மோப்ப நாய் புலித் தோல், சிறுத்தை எலும்புகள், கரடி வேட்டை ஆகியவற்றைக் கண்டறிய பெரும் உதவி புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் ஜூலை 24-ஆம் தேதி போபாலில் இருந்து புறப்பட்டு ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன விலங்கு வேட்டையைத் தடுக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் அனைத்தும் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்தவையாகும்.
முதல் கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரணாலயத்துக்கு ஷைனி கொண்டு செல்லப்பட்டு, அங்கு பணியில் அமர்த்தப்படும். பின்பு, இதுபோன்ற மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சத்தியமங்கலம், ஆனைமலை, மதுமலை சரணாலயங்களுக்கும் நன்கு பயிற்சியளிக்கப்பட்டு மோப்ப நாய்கள் கொண்டு செல்லப்படும். இதுபோன்ற மோப்ப நாய்கள் வட இந்தியாவில் பல்வேறு வனக் குற்றங்களைக் கண்டுபிடித்துள்ளதால், தமிழகக் காடுகளிலும் குற்றங்களைத் தடுக்க இவை பயன்படுத்தப்படவுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வன விலங்கு வேட்டை, கடத்தல் தடுப்பு (ரண்ப்க் கண்ச்ங் பழ்ஹச்ச்ண்ஸ்ரீ) தலைவர் சேகர் குமார் நீரஜ் கூறியது:
வன விலங்கு வேட்டைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு மோப்ப நாய்கள் பெரும் உதவி புரியும் என்தற்காக ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மொத்தம் 14 மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவற்றில் ஒன்றான ஷைனியை முதல் கட்டமாக தமிழகம் அனுப்புகிறோம். இதற்கு முன்பு 2013-ஆம் ஆண்டு பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் சுமார் 25 கடத்தல் குற்றங்களைக் கண்டுப்பிடித்துக் கொடுத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, வன விலங்குகள் கடத்தல் குறித்து முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை. ஆனால்,
யானைத் தந்தங்கள், புலி, சிறுத்தையின் உடல் பாகங்களைக் கண்டுபிடிப்பது அதிகமாகியிருக்கிறது என்றார் சேகர் குமார் நீரஜ்.