விருதுநகரில் ஆயத்த ஆடைகளை திருடிய 3 பெண்கள் கைது
விருதுநகரில் உள்ள ஜவுளி கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து ஆயத்த ஆடைகளை திருடிய 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகரில் உள்ள ஜவுளி கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து ஆயத்த ஆடைகளை திருடிய 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் கச்சேரி சாலையில் ஆயத்த ஆடைகள் விற்பனையகம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 3 பெண்கள் ஆயத்த ஆடைகள் வாங்கிச் செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த விற்பனையகத்தின் பொறுப்பாளர் பத்ரகாளி(25) ஆடைகளை காண்பித்துள்ளார். அதில், ஒன்று கூட பிடிக்கவில்லையெனக் கூறி வெளியேற முயன்றனர். அப்போது, எடுத்து போட்ட ஆடைகளில் குறைந்திருந்ததை கவனித்தார்.
இதையறிந்த 3 பெண்களும் அவசரமாக வெளியேறும் போது சேலைக்குள் மறைத்து வைத்திருந்த ஆடைகள் விழுந்ததை பொறுப்பாளர் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். அதற்குள் கடைக்கு வெளியே இருந்த சிலர் பெண்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் விற்பனையகத்தின் பொறுப்பாளர் பத்ரகாளி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரித்ததில் ஸ்ரீவைகுண்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த நம்பியின் மனைவி நம்பிகண்ணு(40), சுப்பையாவின் மனைவி ராமலட்சுமி(30), இசக்கிராஜாவின் மனைவி வள்ளி(33) என்பது தெரியவந்தது.