விருதுநகரில் சேமிப்பு சீட்டு கம்பெனி நடத்தி ரூ.50 லட்சம் மோசடி பொதுமக்கள் எஸ்.பியிடம் புகார்
விருதுநகரில் சீட்டுக் கம்பெனி நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர்
விருதுநகரில் சீட்டுக் கம்பெனி நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
இது குறித்து சீட்டு பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக சக்கையா பாண்டியன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் மரக்கடை சந்தை தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(45). இவர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் என்ற வகைகளில் வாரம் மற்றும் 36 மாதங்களில் செலுத்தும் வகையில் சீட்டு கம்பெனியை நடத்தி வந்தாராம். அதோடு, குறிப்பிட்ட நாள்களுக்குள் செலுத்தி முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் பணம் கிடைத்து வந்தது.
இதை நம்பி விருதுநகர் பாத்திமா நகர், சிவகாமி நகர், யானைக்குழாய் தெரு, அல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். ஆனால், தவனை காலம் முடிந்த நிலையில் கடந்த 6 மாதமாக பணம் கொடுக்கவில்லையாம். இது குறித்து கேட்டால் கொடுப்பதாக கூறி தாமதம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் போய் பார்த்தபோது வீடு, அலுவலகத்தை பூட்டிவிட்டு 50-க்கும் மேற்பட்டோரிடம் வசூலித்த சீ்ட்டு பணம் சுமார் ரூ.50 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறைவானது தெரியவந்தது. மேலும், செல்லிட பேசி மூலம் பேசினானும் தொடர்பு கொள்ள முடியாத நிலையிருக்கிறது. அதனால், சீட்டு பணத்தை திரும்ப பெற்று காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட எஸ்.பியிடம் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.