விருதுநகர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் அமைக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கோழிப்பண்ணைகள் அமைக்க தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கோழிப்பண்ணைகள் அமைக்க தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்பு திட்டத்தினை கடந்த 2012-13 முதல் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 50 கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வங்கி கடனுதவியுடனும், சுயமூலதனம் மூலம் 5 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட இறைச்சி கோழிப்பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் கொட்டகை அமைக்க 25 சதவீதம் மானியம் அளிக்கப்படும். இதில், கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும். மேலும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், புதிய கொட்டகை அமைத்து விரிவாக்கம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் பயனடையலாம். ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது.
இதில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களி்ல் 3 நாள்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். மேலும், இப்பண்ணை அமைக்க தேர்வு பெற்றவர்கள் 60 நாள்களுக்குள் கொட்டகை அமைப்பது அவசியம் ஆகும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதியும் ஆர்வமும் உடையோர் ஆட்சியரால் அங்கிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளரின் கடிதம், வங்கியிலிருந்து கடன் வழங்க ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுயுடன் வருகிற 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.