பொதுமக்கள் தொடர்பு திட்ட முகாமில் 174 பேருக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 174 பயனாளிகளுக்கு ரூ.29.50 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 174 பயனாளிகளுக்கு ரூ.29.50 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சியைச் சேர்ந்த சீனியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.
இதில், ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், ஏழை எளிய மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிராமங்களில் இருந்து மக்கள் தலைநகருக்கு வந்து சிரமப்பட்டு மனு கொடுப்பதை தவிர்க்கவே இதுபோன்ற பொது மக்கள் தொடர்பு திட்ட முகாம் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இம்முகாமினை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்களிடம் இருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசு மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. மேலும், 30 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் ஆகியோர் கட்டாயம் மருத்துவபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிலும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கற்பவாய் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியம் வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து, 112 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், 28 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமண நிதி உதவி தொகைக்கான காசோலை, அதே திட்டத்தில் 28 பேருக்கு ஈமக்கிரியை மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, 3 பேருக்கு விபத்து நிவாரண உதவித் தொகை, வேளாண்மை துறை சார்பில் 5 பேருக்கு இடுபொருள் வழங்கல் உள்பட 174 பேருக்கு ரூ.29.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாரதிசுப்புராம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநர்(பொறுப்பு) செண்பகராஜ், வட்டாட்சியர் பால்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.