விருதுநகர் அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது லாரி மோதல்: போலீஸார் 3 பேர் படுகாயம்
விருதுநகர் அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் மீது பின்புறமாக வந்த லாரி மோதியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் மீது பின்புறமாக வந்த லாரி மோதியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மூலம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன்(52), தலைமைக் காவலர் காளிமுத்து(33) ஆகியோர் செவ்வாய்கிழமை நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வாகனத்தை காவலரும், ஓட்டுநரும் ஆன ஆறுமுகபெருமாள்(28) என்பவர் ஓட்டினாராம்.
அப்போது, வாகனம் சூலக்கரை தனியார் மருத்துவமனை அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த போது, மதுரையில் இருந்து சாத்தூருக்கு சிமெண்ட் மூடைகளை ஏற்றிச் சென்ற லாரி பின்புறமாக மோதியது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் காளிமுத்து மற்றும் ஆறுமுகபெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.