முகப்பு
தமிழ்நாடு

மசினக்குடி வனப் பகுதியில் விதிகளை மீறி இயங்கி வரும் விடுதிகள் !

முதுமலை புலிகள் சரணலாயத்துக்கு உள்பட்ட மசினக்குடி வனப் பகுதியில் விதிகளை மீறி 80-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இயங்கி வருவதாக

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

முதுமலை புலிகள் சரணலாயத்துக்கு உள்பட்ட மசினக்குடி வனப் பகுதியில் விதிகளை மீறி 80-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளும் தனியார்களால் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 தேசிய விலங்கான புலிகளை காக்க, புலிகள் சரணாலயத்தின் உள்பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

 இதையடுத்து முதுமலை புலிகள் சரணாலயத்தைச் சுற்றி இயங்கி வந்த பல்வேறு தனியார் விடுதிகள் உடனடியாக மூடப்பட்டன. மேலும், வனத் துறை சார்பில் சரணலாயத்தின் வெளிப் பகுதிகளில் அரசே பொது மக்களுக்கான சுற்றுலாவை நடத்தி வருகிறது.

Advertisement

 முதுமலை காப்பிடத்துக்குள் வரும் மசினக்குடி மிகப்பெரும் சுற்றுலா வர்த்தகத் தலம். இங்கு பல ரிசார்ட்டுகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவால் மசினக்குடியில் தனியார் சுற்றுலாக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தடையையும் மீறி பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தனியார் வாகனங்கள்: முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் வனத் துறை ஏற்பாடு செய்யும் வாகனத்தில் கட்டணம் செலுத்தி, அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ளலாம். அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் இந்தச் சுற்றுலா வேன் மூலம் சுமார் 45 நிமிஷ நேரத்தில் வனப் பகுதியில் விலங்குகளை கண்டுகளிக்கலாம். அதே நேரத்தில் சில தனியார் வாகனங்களும் முதுமலை காடுகளை சுற்றிக்காட்டுவதாக கூட்டி செல்கின்றன. இந்தத் தனியார் வாகனங்களுக்கு அனுமதி தருவதில்லை. எனவே, இவர்கள் பயணிகளை பெரும்பாலும் தங்களது ஜீப்புகளில் மசினக்குடிக் கூட்டிச் செல்கின்றனர்.

நபருக்கு ரூ.300: மசினக்குடி வனப் பகுதியை வாகனங்களில் சுற்றிக்காட்ட சீசன் இல்லாத நேரங்களில் நபருக்கு ரூ.300, சீசன் நேரங்களில் நபருக்கு ரூ.500 வரை வசூல் செய்யப்படுறது.

 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியார் வாகன ஓட்டிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதுவும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை மிருகங்கள் சர்வசாதாரணமாக மசினக்குடியின் உள்பகுதியில் உள்ள சாலைகளில் உலா வரும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயணத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றே கருதப்படுகிறது.

யானைகள் வழித் தடங்களில் விடுதிகள்: மசினக்குடி யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி 80 தங்கும் விடுதிகள் இருப்பதாக அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதில், அகைó காட்டு விடுதிகள், முழுக் காட்டு விடுதிகள் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முழுக் காடுகளுக்குள் இருக்கும் விடுதிகளில் தங்குபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.2,500 கட்டணமாக செலுத்த வேண்டும். அரைக் காட்டில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு ரு.1,800 வசூலிக்கப்படுகிறது.

 இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 மசினக்குடியில் விதிகள் மீறி சில விடுதிகள் இயங்குவது உண்மைதான். 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, இங்கு விதிகள் மீறுவது அதிகரித்துள்ளது. அவ்வப்போது, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாதான் வனங்களின் மீது மக்களின் ரசனையையும், விருப்பத்தையும் அதிகரிக்கிறது. வன விலங்குகள் மீதான பற்றையும் வளர்க்கிறது. இதை வாய்ப்பாக கருதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே ஒழிய, ஒட்டுமொத்தமாக மனித வாடை அற்ற பகுதியாக வனத்தை மாற்றக்கூடாது. சுற்றுலா என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவது உண்மை என்றாலும், அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றார்.

ஜீப்பை கண்டால் ஆகாது !
மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்கு தனியார் ஜீப்புகளை கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளை குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.

இதை சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பை கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலா பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலா சென்றார்.

அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகன ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையை புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments