இந்தியாவில் அணு உலையை நிறுவும் வெளிநாட்டு நிறுவனங்கள், அங்கு ஏற்படும் விபத்துக்களுக்கு பொறுப்பேற்தற்கு தேவையில்லை என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாஸு கூறினார்.
புதுதில்லியில் இந்திய வளங்களுக்கான கூட்டமைப்பு (எனர்ஜி ஃபோரம்)சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் இதை கூறினார் சேகர்.
இந்திய அணு சக்தி இழப்பீடு சட்டத்தின் படி அணு உலையை இயக்குவோர் விபத்து ஏற்பட்டால் ரூ. 1500 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும்.
இச்சட்டத்தினால் அநேக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலையை நிறுவுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்திய அணு உலைகள் அனைத்தும் இந்தியர்களின் மேற்பார்வையிலேயே நிர்மாணிக்கப்படுவதால், அணு உலை பாகங்களை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை.
உதிரிப் பாகங்கள் அல்லது அணு எரிபொருள் வழங்குவோர் மொத்த அணு உலை செயல்பாட்டுக்கும் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் சேகர்.
அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசு உருவாக்கியுள்ள ரூ. 1500 கோடி மதிப்பிலான அணு காப்பீடு தொகுப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
இந்த காப்பீடு செயல்பாட்டுக்கு வந்தால் அணு உலை நிறுவோர் விபத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற சரத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என்றார் சேகர் பாஸு.
இந்திய எரிசக்தி ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் 21 அணுமின் உற்பத்தி நிலையங்களும் இப்புதிய அணு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்படும். மேலும், இக்காப்பீடு திட்டம் தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 1000 மெகாவார்ட் அணுமின் உற்பத்தி நிலையத்துக்கும் பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.