தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: மீட்பு பணிகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி புறநகர் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி புறநகர் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளம் மதகு உடைந்து சுமார் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக மறவன் மடம் அந்தோணியார்புரம், கோரம்பள்ளம், மாதவன் நகர், சோரீஸ்புரம், துரைகனி நகர், தப்பிக்கைமீண்டான் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் சுமார் 6 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 25ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருகின்றனர்.
அவர்களை கடலோரக் காவல் படையினர், தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் 6பேரை மீட்டு வந்த, கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ரப்பர் படகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த படகினையும் அதிலிருந்த 6பேரையும், பொதுமக்கள் சேர்ந்து மீட்டனர். மக்களை மீட்க வந்த படகே வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்துள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அந்தோணியார்புரம், கோரம்பள்ளம் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள் பள்ளிகள், அரசு ஐடிஐ உள்ளிட்ட பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துளதால் இன்று திங்கள் கிழமை நடபெற வேண்டிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது 5அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் கிராமங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் மாநகராட்சி, தீயணைப்பு துறையினர் மற்றும் கடலூர் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது, இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறத்தப்பட்டுள்ளனர்.