முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே மதபோதகர் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் கைது

விருதுநகர் அருகே மதபோதகர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று ஆமத்தூர் போலீஸார் கூலிப்படையினர் 8 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஊராட்சி செயலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On : 10 செப்டம்பர், 2015 at 7:24 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:10 PM

விருதுநகர் அருகே மதபோதகர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று ஆமத்தூர் போலீஸார் கூலிப்படையினர் 8 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஊராட்சி செயலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் ரோசல்பட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் லூதர்(42). இவரது மனைவி ஜோசப்பின்(39). இவர்கள் இருவரும் எரிச்சநத்தம்-பேரையூர் சாலையில் தாழிக்குளத்துப்பட்டியில் நல்ல மேய்ப்பர் ஆலயம் நடத்தி வந்தனர். இந்த ஆலயத்தில் கடந்த 6-ம் தேதி ஆராதனை கூட்டத்தை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ரோசல்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அழகாபுரி-விருதுநகர் சாலையில் எரிச்சநத்தத்திற்கும், செங்குன்றாபுரத்திற்கும் இடையேவுள்ள சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

Advertisement

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:

மதபோதகர் மார்டின் லூதர் ரோசல்பட்டி ஊராட்சி செயலர் முத்துவேல் மீது அரசுக்கும், பல்வேறு துறை  அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பியுள்ளார். அதோடு, இவர்களுக்குள் வீட்டுப் பிரச்னையும் இருந்துள்ளது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து மல்லாங்கிணறில் உள்ள உறவினரான முருகன் என்ற வெடிகுண்டு முருகேசனை(47) அணுகி, மதபோதகரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கொலை செய்ய வேண்டும் எனக் கூறி, அதற்காக ரூ.1 லட்சமும் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் முருகேசன், மல்லாங்கிணரைச் சேர்ந்த ராஜபெருமாள்(48) என்பவரின் வாகனத்தை திருக்கோயிலுக்கு செல்ல வேண்டும்மென வாடக்கைக்கு எடுத்துள்ளனர். அதில், கூலிப்படையைச் சேர்நத மதுரை சிலைமானைச் சேர்ந்த தவமணி(19), மகாபிரபு(19), மல்லாங்கிணறு கெப்பிலிங்கம்பட்டி மகாலிங்கம்(39) ஆகியோர் மதபோதகரை பின்தொடர்ந்து கண்காணித்தனர்.

அதைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து மதபோதகர் புறப்பட்டதை, திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சந்தோஷ்(30), மதுரை சிலைமானைச் சேர்ந்த அஜித் என்ற தமிழ்செல்வம்(18), அவனியாபுரம் முத்துச்செல்வம்(20) ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து, 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று மதபோதகரை வெட்டி படுகொலை செய்தது விசாரணையில்  தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவி்த்தனர்.

மேலும், கூலிப்படை பயன்படுத்திய வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதையடுத்து 8 பேரையும் போலீஸார் கைது செய்து விருதுநகர் குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி பாலசுப்பிரமணியன் முன்பு ஆஜார்படுத்தினர்.

மேலும், இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரோசல்பட்டி ஊராட்சி செயலர் முத்துவேலை போலீஸார் தேடி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.