விருதுநகர் அருகே திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாக மாற்றுவது குறித்த கிராமசபை கூட்டம்
விருதுநகர் அருகே திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் கோட்டையூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
விருதுநகர் அருகே திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் கோட்டையூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
இக்கிராம சமுதாய கூட வளாகத்தில் நடந்த கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து பேசுகையில், கிராம ஊராட்சிகளை சுகாதார கிராமமாக மாற்றுவது ஊராட்சி தலைவர்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் குறித்தும், தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்துவதின் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். இது தொடர்பாக ஒவ்வொரு வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் வழங்கவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, விவாதம் போன்றவைகளை நடத்தவும் வேண்டும்.
தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி கழிப்பறைகள் கட்ட வேண்டும். கழிப்பிடமாக பயன்படுத்தும் இடங்களை கண்டறிந்து அங்கு முள்புதர்களை அகற்றி சுத்தம் செய்து அங்கு மரக்கன்றுகள் நட வேண்டும். ஏற்கனவே கோட்டையூர் ஆன்மிக சுற்றுலா வழிபாட்டு தலமாக இருப்பதால் தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் மூலம் ரூ.1.50 கோடிக்கு பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் முதல்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட 20 கிராம ஊராட்சிகளிலும் இதேபோல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் தனிநபர் கழிப்பறைகள் அமைத்து, சுகாதார ஊராட்சியாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கி.கலாநிதி, ஆணையாளர் தனசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மல்லிகா, மகளிர் திட்ட மேலாளர் விஜயலட்சுமி, ஊராட்சி தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.