விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாக விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாக விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மு. வடிவேல்பிரபு நியமிக்கப்பட்டிருந்தார். இவர், புதிதாக உருவாக்கப்பட்ட இலுப்பூர் வருவாய் கோட்டத்தில் இரண்டாவது கோட்டாட்சியராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு கடந்த மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்த ஓரிரு நாளில் விராலிமலை ஒன்றியப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த காமாட்சி விளக்குகளை(குத்து விளக்கு) பறிமுதல் செய்து, வழங்கியவர்கள் மீது வழக்கு பதிந்து அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர்.
ஆனால், கடந்த காலங்களில் இவர் பணி தொய்வடைந்ததாகவும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக இருந்ததாகவும் அரசியல் கட்கிகள் தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இவர் மீது புகார்கள் அனுப்பி வந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை அதிரடியாக, விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. வடிவேல்பிரபுவை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சென்னை சவுத், கூடுதல் பிஏ டூ கமிஷனர் சர்வே அண்ட் செட்டில் மென்ட் உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த ஆர். டெய்ஸி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.